Skip to main content

Posts

Showing posts from October, 2018

சஹானா கவிதைகள்

‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை கவிதைக் கணங்களாக நிகழ்த்துபவை சஹானாவின் கவிதைகள். இறந்த உலகங்கள், இறந்த அனுபவங்கள் மோதிக் கொண்டேயிருக்கும் சித்தத்தைக் கிழித்து தற்கணத்தில் வேரூன்ற சஹானா சொல்லும் தேவதைக் கதைகளாக அவரது கவிதைகள் இருக்கின்றன. தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் பேதமின்மையை உணரும் புள்ளிகளில் தன் கவிதைகளை எழுதிப் பார்த்துள்ளார் சஹானா. பள்ளி பீரியட் இடைவெளியில் கழிப்பறை சுவரில் தேங்கியிருக்கும் நீரில் கும்மாளமிடும் குருவியை தன் மனதில் பாதியாக சஹானாவுக்குப் பார்க்கத் தெரிகிறது. இயல்பாகவே கற்பனைக்கும் நிஜத்துக்குமான திரைச்சீலை கிழிந்த உலகம் சஹானாவுடையது. “சிறு துளியில் எனது குடம் பொங்கி வழிகிறது’ என்னும் அறிதல் அப்படித்தான் சத்தியமாகிறது. இந்த உலகில் எங்கோ ஓரிடத்தில் சிறுதுளியில் பொங்கும் குடத்தின் சாத்திய இருப்பை அந்தக் கவிதை உறுதி செய்துவிடுகிறது. குழந்தை தாய்க்குப் பாலூட்டுகிறது என்ற வரியும் உண்மையாகும் இடம் அது.     சம்பிரதாயப் பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறி விட்ட சஹானா குழந்தை, ஞானி, சிறுமி, மகள்

நீலமிருது

பறக்கும் ரயிலிலிருந்து கலைவாணர் அரங்கத்தின் வாகன நிறுத்தத்தில் இரண்டு புதியரகக் கார்களுக்கு நடுவே கடல் நீல நிறத்து அம்பாசிடர் காரைப் பார்த்தேன். வானை முட்டும் கட்டிடங்களுக்கு நடுவே மிகவும் ஆழம் மிகவும் தூரம் மிகவும் ஏகாந்தம் மிகவும் அமைதி அந்த நீல நிற அம்பாசிடர் கார். என் அம்மாவின் திருமணப் பட்டுச்சேலையில் பின்னொரு நாள் உறங்கியபோது உணர்ந்த மிருது வெள்ளிப் பரல்கள் மின்னி மறையும் இளங்காலை வெயிலில் ஒற்றை ஜோடியாய் அவள் கைபிடித்து கடல் நோக்கி நடந்த நாளில் பாதமெங்கும் படர்ந்த மிருது. 2 இலவ மரம் கிளி பரஸ்பரம் பரஸ்பரம் நினைவில் இல்லாத கதை. இலைகளுக்கும் மரத்துக்கும் பச்சை மேல் மேலும் இச்சையை அளித்து சுற்றி சுற்றிப் பறந்தன கிளிகள்.

மியாவ் மியாவ் மியாவ்

    தாய்ப்பாலுடன் சேர்ந்து பருப்பு சோறு சாப்பிடத் தொடங்கும் போது குழந்தைகளுக்கு பூனை மீசை வளர்கிறது பூனைகளுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் மீசை அது அம்மாவின் ரத்தம் குடித்து வளர்ந்த மீசையாக்கும் என்று ரகசியமாய் தெரிவித்து வாயைச் சப்புக்கொட்டுகிறது குழந்தை . 000 புழக்கடையில் என்ன சத்தம் என்கிறாள் காக்காய் கரைகிறது என்றேன் வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னாள் அப்படியாவென்று கேட்டு அடுப்பங்கரைப் பால்கனிக்குப் போய் நானும் சேர்ந்து கரைந்தேன் ஆமாம் அவள் சொன்னது சரிதான் எங்கள் கரைதலுக்கு உள்ளே மியாவ் மி ….. யா ….. வ் மி ………. யா ………. வ் இருக்கிறது . 5 உனது கடைசிப் பூனைக் கவிதையை எப்போது எழுதப் போகிறாய் ? இப்படி ஒரு குரல் கேட்டது விழித்தேன் முதலில் பயந்து பின்னர் தளர்ந்து சிரித்தேன் கடைசிப் பூனையைப் பார்த்த பிறகு போதுமா என்று பதிலைச் சொல்லி புரண்டு கொண்டேன் . 000 முகத்தை உற்றுப்

நகுலன் கண்ட புதுநகரம்

புகைப்படம் : ஆர். ஆர். ஸ்ரீனிவாசன் ஷங்கர்ராமசுப்ரமணியன் நகுலன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் நான் செய்ய முயற்சித்தது நகுலன் தொடர்பாக பெருகிய நினைவை நிறுத்த முயற்சித்ததுதான் . என்னில் பெருகும் நினைவுகளுக்கு நகுலனின் மூலமாகவே நான் இடையீடு செய்யின் அது ஒரு நிமித்தம் மாத்திரம் .   மதம் , நியதிகள் , சம்பிரதாயம் , பழக்கம் , நிறுவனங்கள் , அறிவு ஆகியவை கருத்துருவம் செய்த மனிதனின் ஏற்கனவேயான மரணத்தை விபரீத அழகுள்ள படிமங்களால் உரக்க அறிவித்தவர் அவர் . தன் இருப்பையே யோகத்தின் சவநிலையாக கோட் ஸ்டாண்ட் கவிதைகளில் வெளிப்படுத்தியவர் . அறிதலின் மகிழ்ச்சியுடன் பச்சைக் குழந்தையை ஸ்பரிசிக்கும் வியப்புடன் சாவை நோக்கித் தியானித்திருந்தவர் அவர் . ஒரு புதிய செய்தியைச் சொல்வது போல நகுலன் இறந்து விட்டாரென்று யாராவது நகுலனிடம் போய்ச் சொல்வார்கள் என்றால் நகுலன் சிரிசிரிசிரியென்று சிரிப்பார் . நகுலன் என்ற பெயரே அவர் தனக்குத் தரும் ஒரு சாயல் அல்லது விளக்கம்தான் . நகுலன் என்ற பாத்திரத்தை ஏன் டி . கே . துரைசாமி த