Skip to main content

எரியும் நகரத்திலிருந்து மண்டோ



ஷங்கர்ராமசுப்ரமணியன்


ஒரு சில மாதங்களுக்கு முன் பம்பாயில் கடல்நீர் இனிப்புச்
சுவையடைந்ததை செய்தித்தாள் படிப்பவர்கள் நினைவில்
வைத்திருக்கக்கூடும். அன்று மும்பையின் கடல் நீர் திடீரென
இனிப்பாகிவிட்ட அற்புதத்தைப் பருக, அற்புதங்கள் அருகி, கரிப்புச்
சுவையையே நாள்தோறும் சுவைக்கும் மும்பையின் வெகுமக்கள்
இனிப்பான கடலை நோக்கித் திரண்டனர். கடல் நீரின்
வேதிச்சமநிலை குறைந்திருப்பதால் நீரின் ருசி மாறியுள்ளது
என்றும், இனிப்பான குடிநீர் பருகுவதற்கு உகந்ததல்ல என்றும்
விஞ்ஞான அறிவிப்புகள் உடனே வெளியாயின. இருப்பினும்
காலி கோக் பாட்டில்களில் கடல் நீர் எடுக்கப்பட்டு மும்பையின்
வெகு மக்களால் புனித நீரெனப் பருகப்பட்டது, விற்கப்பட்டது.
மும்பையில் கடல் இனிப்பான பிறகு இந்தியாவின் வெவ்வேறு
இடங்களில் உள்ள கடல்களும் இனிப்பானது. குஜராத்திலும் கடல்
இனிப்பானது. குஜராத்தில் கடல் இனிப்பானதில் நமக்கு ஒன்றும்
ஆச்சரியம் இருக்காது. ரத்தமே அவ்வப்போது தித்திக்கும் நிலம்
தானே இது.

மேலே சொல்லப்பட்ட சம்பவம் வெகுமக்களின் கூட்டுணர்வு
செயல்படும் முறைக்குச் சிறந்த உதாரணம். இதை ஒரு மக்கள்
குழு ஒரு நிகழ்வில் ஒரு காலகட்டத்தில் பகிரும் உணர்ச்சி
எனலாம். இக்கூட்டுணர்ச்சி அதீதமாக செயல்படும் போது பின்
நிகழ்வுகளையும், விளைவுகளையும் அறிவியல் பார்வையோடு
வெறும் நன்மையாகவும், தீமையாகவும் அசட்டுணர்ச்சியாகவும்
வெறுமனே பாவிக்க முடியாது. பகுத்தறிவு, ஜனநாயகம், மனித
மதிப்பு, நாகரீகம் என மனிதன் காலப்போக்கில் பாவிக்கும் எல்லா
முகமூடிகளும் அறுந்து தொங்கும் ஒப்பனை அறை இது.
வேறுவேறு காலகட்டங்களில் வெகுமக்கள் மத்தியில் படரும்
அதீதக் கூட்டுணர்ச்சிக்கு ஒரு பொது தர்க்கம் இருக்கிறது.
அத்தர்க்கத்திற்கு லாவகமான உபகரணமாக, பொது
அடையாளங்களை எடுத்துக் கொள்கிறது. ஒற்றைப் பொது

அடையாள முகமூடியை பிரமாண்டப்படுத்திக் காட்டும் கூட்டு
நனவிலி ஒரு வகையில் சமகாலப் பிரக்ஞையையும், விருப்பு,
வெறுப்புகளையும் அனுசரிக்கிறது. ஏனெனில் காலத்தை
அனுசரிக்காத பிரக்ஞை கூட்டுணர்ச்சியை உசுப்புவதற்கு
லாயக்கற்றது.

1921 ஆம் ஆண்டு குஜராத்தில் தேசிய போராட்டத்துடன் அதுவரை
தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்த ஆதிவாசிகள்
தாங்கள் வழிபடும் சாலாபாயின் கட்டளைகளை ஏற்றுக்
காந்தியைப் பின்பற்றி தேசியப் போராட்டத்துடன் இனங்கண்டு
கொண்டு, தங்கள் பழக்க வழக்கங்களை சீர்ப்படுத்திய தேவி
இயக்கமும் மக்களின் கூட்டுணர்ச்சி, வரலாற்று இயக்கத்தோடு
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தன் வழியிலேயே
வெளிப்படுத்திய மற்றொரு உதாரணம் இது. அப்போது ஆதிவாசிக்
கிராமங்களின் கிணறுகளில் காந்தி ராட்டையை நூற்றவாறு
தோற்றமளித்தார். சிலந்திகள் தங்கள் வலைகளில் காந்தியின்
ராட்டையை வரைந்தன. ஆதிவாசிகளுக்காக கடவுள் தயாரித்து
அனுப்பிய புதிய ராஜாவானார் காந்தி.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், பிரிவினையை ஒட்டிய
காலத்திலும் நடந்த இந்து, முஸ்லீம் மக்களுக்கு இடையிலிருந்த
பதற்றங்களும், கலவரங்களும் கூட்டம் கூட்டமாக நடந்த
கொள்ளை, கற்பழிப்பு, கொலைகள் கொண்ட பிரமாண்ட மனித
அழிவை நிகழ்த்தியது வெகுமக்களின் கூட்டுணர்ச்சியே.
இதுபோன்ற தொடர் நிகழ்வுகளுக்குப் பின் இயங்கும்
கூட்டுணர்ச்சியில் பங்கு பெறும் குழுபோதத்தை ஆதியந்தம்
தெரியாத செயல்பிராவகத்த மண்டோ தரிசிப்பதனாலேயே ஒரு
போதும் உலராத ரத்தத்தின் ஈர மெய்மையாய் அவர் கதைகள்
இருக்கின்றன. மண்டோவின் கதைகளில் கூட்டம் கூட்டமாய்
கொலைகள், கொள்ளைகள் நடக்கின்றன. கும்பலாக மனிதர்கள்
வருகிறார்கள். கும்பல் ஒன்று காரை மறிக்கிறது. கும்பல் ஒன்று
வீட்டுக்குள் நுழைகிறது. அவர்கள் மண்டோவின் கதைகளில்
முழுமையான தீயவர்கள் இல்லை. பாவம் அவர்கள் வரலாற்றின்
நினைவை, மிகப் பழுதான தர்க்கங்களை, வெறியூட்டப்பட்ட
கட்டுக்கதைகளை தங்கள் வெறுமையுடலில் சுமப்பவர்கள்.
கொலைகள், பதில் கொலைகள் எனத் தொடர் நிகழ்வின் அதீதம்
மண்டோவையும், அவர் கதாபாத்திரங்களையும் தீண்டும்
நிலையில் அனைவரும் தேசமும், மதமும் கொடுத்த எல்லா
அடையாளங்களும், தங்களுக்கு பகைப்புலமாய் போன
அநாதைகள்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு விஞ்ஞானியுடன் நடத்திய
உரையாடல் ஒன்றில், மனிதர்களின் நினைவில் ஒரு பகுதியை
மட்டும் தற்காலிக மறதிக்குள்ளாக்கச் சாத்தியமிருந்தால்
மனிதர்கள் தாங்கள் அடையாளம் காணும் குழுவுக்கு ஏற்பட்ட
காலங்களுக்கு முன் நடந்த வரலாற்று அவமானத்துக்கு
நிகழ்காலத்தில் பழிதீர்ப்பது நடக்காமல் உலகம் அமைதியாய்
இருக்க முடியுமே? என்ற வினாவை எழுப்பியிருப்பார்.
பிரிவினைக் காலச் சம்பவங்களைப் பற்றி கதை எழுதியவராய்
மட்டும் மண்டோவைப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
பிரிவினைச் சம்பவங்கள் இல்லாத கதைகளிலும் கூட ஒரு
கலவர உணர்நிலை உள்ளது. சமூகத்தால் உறுதியாக ஏற்கப்பட்ட
குடும்ப, மத, இன அடையாளங்களுக்கு வெளியே உள்ள அல்லது
அடையாளம் திரிந்த மனிதர்களும், அவர்கள் புழங்கும்
வெளிகளுமே மண்டோவின் கதைப்புலமாய் உள்ளது. அதிகார
முரணும், தகர்ப்பும், சுய அழிவிற்கான ஆசையும், வேறு, வேறு
தன்னிலைகள் ஒருவனுக்குள்ளே நிகழ்த்தும் கொலைகளும்,
உரையாடும் நவீன தீமையின் தேவவாக்கியங்கள் என நாம்
காஃப்காவின் படைப்பை வரையறுக்கலாம்.
தன் கதைகள் வழியாக மண்டோ நிகழ்த்தும் குறுக்கீடு
எவ்வகைப்பட்டது? ஒரு குருட்டு யாசகனின் தட்டில்
தீமையின் பல்வேறு யதார்த்தங்கள் நாணயங்களாக ஒரே
சமயத்தில் குலுங்குவது போல் தான் மண்டோவின் கதைகள்
உள்ளன. மண்டோவிடம் முட்டாளின் உணர்நிலையும்,
மேதமையும் இணைந்து செயல்படுகிறது. முட்டாளின்
உணர்நிலை என்று நான் சொல்ல வருவது வெவ்வேறு
யதார்த்தங்களை மனத்தடையற்று, சுதந்திரமாக அனுமதிப்பது
என்பதையே. அதில் எழுத்தாளனின் தன்னிலையே ஊடுருவாத
படைப்பு என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவன்
அனுமதிக்கும் யதார்த்தங்களோடு, இன்னொரு யதார்த்தமாய்
அல்லது புழங்கு வெளியாகவே அவனது தன்னிலையும்
மறைந்துள்ளது. அத்தன்நிலையை இயற்கையானதாக,
கண்ணாடித் தன்மையுடையதாக, மறைந்திருக்கக் கூடியதாக
வாழ்வைப் போலவே நிராகரிக்க இயலாததாய் மாற்றும் திறனே
எழுத்தாளனின் மேதமையாய் இருக்கிறது. அப்போது படைப்பே
விமர்சனமாய் மாறி அடிப்படைகளையே உலுக்கும் வினாக்களாய்
உயர்ந்து விடுகிறது.

சிந்தையில் எரியும் இலக்கில்லா வேட்கையுடன் நகரில்
அலையும் ஒரு வறியவனின் நிலை மண்டோ போன்ற
பெரும்படைப்பாளிகளுக்குரியதாய் இருக்கிறது. பொது
இயக்கத்தோடு ஒன்றாக ஈடுபடுவது (ஒரு தோற்றம்) பல சமயம்
கூட்டுணர்ச்சி தரும் போதையில் யதார்த்தங்கள் குலைந்து
பீதியுடன் எதிர்கொள்ளப்படுவது (ஒரு நிச்சய நிலை). அப்போது
எழுத்தாளனின் தன்னுணர்வு மீட்சியை நோக்கி, நிம்மதியை
நோக்கி, கடவுளை நோக்கி, மெய்மையை நோக்கி எழுப்பும்
அபயக் குரலே படைப்பின் சில சந்தர்ப்பங்களை மாயத்
தருணங்களாக்குகிறது. சிந்தையின் எரிநிலையிலேயே
செயல்பட்ட கதைகள் மண்டோவினுடையவை.

இடைவெளி நாவலில் தினகரன் தெருச் சூதாட்டக்காரனின்
விளையாட்டில் பங்கேற்கும் தருணத்தை உதாரணமாய்
சொல்லலாம். நகுலனின் நினைவுப் பாதையில் மனநோய்
மருத்துவமனையில் நடக்கும் அபத்த உரையாடல்கள். ஜி.
நாகராஜன் சிறுகதைகளில் சில, சுரேஷ்குமார் இந்திரஜித்தின்
கதைகள் (காலம், நினைவு குலைந்து இயக்கங்கள் ஒன்றின் மேல்
படர்ந்து மேவி மனிதனின் மேல்படியும் மூட்டம்).

இவ்வழகிய மலர்களுடன் கூடிய இப்பெட்டியைப் பெறுவதற்கு
நான் செய்திருப்பது என்ன? அவற்றுக்கு உரித்தானவனாகி எதுவும்
செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பெட்டியில் பிசாசு
ஒன்று மறைந்திருந்தது. என் மூக்கை கிள்ளிவிட்டு, என்னை

விட்டுப் போக மறுத்திடும்; ஆகவே அதனை நான் எப்போதும்
தூக்கித் திரிய வேண்டும் என்பதாயிருப்பின், மிகப் பொருத்தமாய்
இருக்கும். மலர்களிடம் எனக்கு பிரியமிருந்ததில்லை.
ஃப்ராலின் பெலிசுக்கு காஃப்கா எழுதிய கடிதத்திலிருந்து...

மண்டோவின் கதைகள் செயலின் தீவிர உணர்நிலை
தருணங்களையும், செயல்முடிந்து மனமூட்டம் கூடிய
துயருணர்ச்சி பெருகும் தோற்றத்தையும் பிசிறற்று
உருவாக்குவதில் வெற்றி கண்டவை. மண்டோ மனமூட்டத்துடன்
கூடிய துயரச் சாயலை புறக்காட்சிகளாகவும், வெளிச்சமாகவுமே
மாற்றிவிடுகிறார். அந்த வெளிச்சத்தில் துளி ரொமாண்டிசிசம்
இல்லை. (குறத்தி முடுக்கில் உள்ள வெளிச்சத்தில் சிறிது
ரொமாண்டிசிசம், மனிதாபிமானத்தின் ஒளிச்சேர்க்கை உண்டு).
உலகில் சகல மனிதர்களும் உணரும் அபத்தம் கலந்த துயரச்
சாயல் ஏறிய வெளிச்சம் தான் மண்டோ ஸ்பரிசிக்கும் மெய்மை
எனலாமா?

பரிசுக்கும், தண்டனைக்கும் வித்தியாசத்தை பகுத்தறிய இயலாத
குழந்தைகளாய், எல்லாவற்றையும் போட்டுடைத்துவிட்டு
நிர்க்கதியாய் அமர்ந்திருக்கும் வலி நிறைந்த மனிதர்களை
மண்டோவின் கதைகள் விசாரிக்கின்றன. வரலாற்றில், மனிதன்
உருவாக்கிய குடும்பம், மதம், மதம் (உடல்) அடையாளங்கள்,
சிறைச்சாலைகள், தேசம், குற்றம், தண்டனை, சேவை, விசுவாசம்
என்று அவன் உருவாக்கிய சகல கருத்தாக்ங்களும் அமைப்புகளும்
அழுகிப் புழுத்திருப்பதை, அழுகிய நீர் ஊறிய செத்தைகளோடு நீர்
சொட்ட சொட்ட தன் கதைகளில் கிளறுகிறார் மண்டோ. சகல
தீவினைகளையும், பல பொருண்மையுள்ள யதார்த்தங்களையும்
தன் மீது ஏவிவிட்டு, சகல துன்பங்களையும் சுமந்து, உலகைக்
குணமூட்ட முயலுபவராய் மண்டோ தெரிகிறார். வரலாற்றின்
இயக்கப்போக்கு தன் குரலை பிரதிபலிக்க மட்டுமல்ல தன் காலத்தின் கிறிஸ்துவாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறது. மண்டோ
அப்படிப்பட்ட துயர சிருஷ்டியே. (வலி என்ற மையத்தில்
லட்சக்கணக்கான இல்லை இல்லை கோடிக்கணக்கான தெருக்கள்
சிக்கி ஒன்றோடு, ஒன்று சந்தித்துக் கொள்கின்றன) மோஸல்கதையில் திரிலோச்சனைப் பார்த்து, 
‘உன்னைப் போன்ற வளர்ந்த மனிதன், மதத்தை ஒருத்தனின் ஜட்டியோடு சம்பந்தப்படுத்துவதற்காக வெட்கப்பட வேண்டும்’ என்கிறாள்.
எப்போது ஒருவன் குற்றத்தின் படிகளில் ஏறுகிறான், எப்போது
திரிந்து போகிறான், எப்போது சோரத்தின் கரங்களுக்குள்
ஒப்படைக்கிறான், எப்போது கொலை அவனில் உதிக்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவன் கையில் எதுவும்
பத்திரமாய் இருப்பதில்லை. ஒத்துழைப்பு கதையில் தன்
வீட்டைச் சூறையாடுபவனிடம் வீட்டு சொந்தக்காரர் சொல்லும்
வாக்கியம் இது: ஜாக்கிரதையாக இரு. அந்தக் கண்ணாடி
ஜாடியை நழுவ விட்டுவிடுவாய்... அது உன் விரல்களில் இருந்து
நழுவிக் கொண்டிருக்கிறது
வீட்டின் சொந்தக்காரர் சொல்லும் இந்த வாக்கியத்தை கடவுள் தன் நகல் ஒருவனைப் பார்த்து எச்சரிக்கும் வார்த்தையாகவும் இருக்கிறது.
ஜானகிகதையில் வரும் ஜானகி ஒரே நேரத்தில் மூன்று
பேரையுமே தீவிரமாய் காதலிக்கிறாள். அவளுடைய அன்பின்
பாத்திரத்தில் எல்லாருக்கும் வற்றாத காதலின் அறைகளை
குறுக்கும் நெடுக்குமாய் நேர்த்தியாக கையாள இயல்கிறது.
என்னுடைய ரொமாண்டிசத்தின் மேலும், உறவுகள் தொடர்பான
ஒற்றைத் தன்மையுள்ள நேர்மையுணர்ச்சி குறித்த என் மதிப்பின்
மேலும் ஜானகி தேய்த்த அவளின் வெள்ளை சல்வார் என்றும்
என், நினைவில் இருக்கக்கூடியது.

மார்பினை அறுத்து ரத்த விரலை பாலென குழந்தையின்
வாய்க்குள் வைத்தபடி இறக்கும் ஜுபைதாவும்
மேற்சொல்லப்பட்ட ஒரு அதீதத்தைப் பகிர்பவர்களே.
நன்மையின் பெயரால் இவ்வுலகத்தைக் கடவுள்
படைத்திருக்கக்கூடும். அமைதிக்கும், அறவியலுக்கும்,

ஒழுங்குக்கும் கட்டுப்பட்டு மனித சமூகம் திகழுமென்ற கனவில்
மதங்களையும், கடவுளையும், தண்டனைகளையும் மகான்களும்,
அரசியலாளர்களும் படைத்திருக்கலாம். ஆனால் வரலாறு எங்கும்
இவற்றின் பெயரால் ரத்தம் பெருகுவதை, சக உடலின் ரத்தமே
ஜவ்வு மிட்டாயைப் போல இனிப்பாய் பல தருணங்களில்
மாறுவதைச் சொன்ன ஒரு அவதூதனின் காரியம் தான் மண்டோ
செய்வது. நிர்வாண ராஜாவை கண்டுகொள்ளும் குழந்தை
வெளிப்படுத்தும் மெய்மையை தான் மண்டோ வெளிப்படுத்துவது.
மண்டோ போன்ற பெருநிகழ்வு ஒரு நிகழ்தகவு அல்ல. சமூக,
வரலாற்று இயங்கியலில் உருவாகும் ஒரு நிர்பந்தமாகவே நாம்
மண்டோவைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா என்னும் தேசம் உருவாகும் தொடக்கப் புள்ளியின்
முக்கிய சாட்சியாய் மண்டோ இருக்கிறார். தேசம் என்ற பெயரில்
நடந்த மனித அழிவுகளுக்கும், அபத்தங்களுக்கும் சாட்சியாகிறார்.
ஒரு சிறு வகுப்பாரின் அரசியல், அதிகார நலன்களுக்காக
பலன்களுக்காக எவ்வளவு பெரிய பலிகள் கொடுக்கப்படுகின்றன.
தேச பக்தியின் பெயராலும், ஒரு இனத்தாரின் மறைமுக
நலனுக்காகவும் பன்மைத்துவம் உதிர்க்கப்பட்டு, சிறுபான்மை
இஸ்லாமியர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு, இந்தியா
மதமயபடுத்தப்படும் இச்சூழலில் மண்டோ தமிழில்
வாசிக்கப்படுவது அவசியமான குணமூட்டலை செய்யும்.
மண்டோவின் கதைகள் ஒரு முன்னெச்சரிக்கையும்கூட.
மண்டோவைப் பற்றிப் பேசும்போது இனிப்பு என்ற படிமத்தை
நான் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். மண்டோவின் கதைகளிலும்
குரூரம், கொலைகளுக்குப் பக்கத்தில் இனிப்பு பல்வேறு
இடங்களில் வரவே செய்கிறது. மண்டோவைப் படித்த உணர்வை
என் நண்பர் தர்ரமாஜனிடம் சில நாட்களுக்கு முன் பகிர்ந்து
கொண்டபோது அவர் சொன்ன நிகழ்ச்சி ஒன்று.

தர்மராஜன் ஒரு வேலையாக பேருந்தில் மதுரையிலிருந்து
பயணிக்கும் போது கொலைக்குற்றம் ஒன்றிற்காக கைது
செய்யப்பட்ட கைதிகள் அவருடன் முன்சீட்டில் போலீஸ்
காவலுடன் பயணித்துள்ளார்கள். தர்மராஜன் அவர்களிடம் பேச்சுக்
கொடுத்து உரையாடலை ஆரம்பிக்க அவர்களும் சுவாரஸ்யமாய்
தங்களுக்கு நடந்தவைகளை பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
தர்மராஜன் தன் காலிடுக்கில் 100 ஜிலேபிகள் கொண்ட பாலிதீன்
பையை வைத்திருந்துள்ளார். கல்யாண ஆர்டர் ஒன்றுக்கு
கொண்டு செல்லப்படுபவன அவை. கொலைக் கைதிகளில் ஒருவர்,
அண்ணே, அந்த ஜிலேபி ஒண்ணே ஒண்ணு குடுங்களண்ணே என்று திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். ஆர்டருக்கு சரியான
எண்ணிக்கையில் கொண்டு சொல்வதால் ஜிலேபி தர இயலாத
கையறு நிலை தர்மராஜனுக்கு, அவர்களின் தொடர்ந்த பேச்சில்
இன்னொரு கொலைக்கான திட்டமும் தன்னிடம்
வெளிப்படையாக விவரிக்கப்பட்டதை தர்மராஜன் சொன்னார்.
இயல்பாக குற்றமும், எளிய ஆசை ஒன்றும் பிணைத்திருக்கும்
மனித தருணத்தைச் சொல்கிறது இச்சம்பவம். மண்டோவின்
கதைகளுக்கு நெருக்கமான விஷயம் இது. இதனுடன் இனிப்பு
என்னும் படிமம் இக்கட்டுரையில் கைவிடப்படுகிறது.

ஒரு பெருநகரத்தின் சகல வெளிச்சங்களுக்கும், இருட்டுக்கும்,
பழக்கப்பட்ட அதிலிருந்து விடுபட இயலாத மனம்
மண்டோவினுடையது. அனாதையும் வேசியும் யாசகனும்
அடையாளம் கண்டு, தன்னுணர்வற்று இன்மையின்
பிரமாண்டத்தில் தங்களைக் கரைத்துக் கொள்ளும் இடமாய் நகர்
வெளியே இருக்கிறது. ஒரு வகையான அநாதை நிலை
உருவாக்கும் அதீதங்களையும்,, அபத்தங்களையும் அவரின்
நாயகர்கள் பகிர்கின்றனர். மம்மி என்னும் மண்டோவின் கதையில்
வரும் மம்மியின் விடுதியை மண்டோவின் நகரமெனவே
நம்மால் நீட்டித்துப் பார்க்க இயலும். மம்மியின் விடுதிக்குள்
யாரும் வரலாம். விருந்து, கேளிக்கைகளை அனுபவிக்கலாம்.
காமம், குரோதங்கள், பழி, காதல் என எந்த உணர்ச்சியையும்
வெளிப்படுத்த இயலும் இடமாய் மம்மியின் விடுதி உள்ளது.
மம்மி எல்லாரையும், எல்லாவற்றையும் தாங்கி அனைவரையும்
சுத்திகரிப்பவளாய் மம்மி இருக்கிறாள். மண்டோவிற்கு பாம்பே
நகரம் ஒரு விடுபட முடியாத பாதுகாப்புணர்வைத் தந்துள்ளது.
பாம்பே நகரத்தை விட்டு வெளியேறுவதே, இந்திய
எல்லையை விட்டு நீங்குவதாகத்தான் அவருக்கு இருந்திருக்க
வேண்டும்.

மம்மி, ஜானகி மற்றும் மண்டோவின் நினைவோடகளிலும் வரும்
அநாதைத் தன்மையுள்ள தனிமையான ஆண்கள் கூட்டாக ஒரு
அபத்தத்தை, தொடர் சலிப்பு நிலையை சுழற்றி ஒரு
ஹிப்டுல்லாவாக (மண்டோவினால் கண்டுபிடிக்கப்பட்டு
புழங்கப்பட்ட ஒரு அர்த்தமற்ற வார்த்தை) கூட்டு சிரிப்பின்
சத்தங்களாக மாற்றுபவர்களாய் உள்ளார்கள். ஆண்கள், பெண்கள்
இருவருமே அபத்தத்தை வேறு, வேறு உணர்நிலைகளில்
கையாள்கிறார்கள். பெண்கள் அபத்த நிலையை முட்டி, தகர்க்க
முயன்று குற்றம் மற்றும் தீமையின் சந்தர்ப்பத்துக்குள் ஒப்புக்
கொடுக்கின்றனர். ஆணுக்குக் கூடுமானவரை தான் உணரும்
அபத்த நிலையை பரஸ்பரமாய் கைமாற்றி ஒரு குழுவின்
கூட்டுப் போதமாய் மதுவுடனோ, தேநீருடநோ பகிர்ந்து கொள்ள
முடிகிறது. 

அவ்வகையில் மண்டோவின் பெண்கள் தீவிர, அதீத நிலையை பிரதிபலிக்கும் தனித்துவமானவர்கள். ஒரு வகையில்
மண்டோவின் சார்பு வலிமையாய் அவர் படைத்த
பெண்களிடமே இருக்கிறதென்றும் சொல்ல இயலும்.
பிரிவினைக் கால சம்பவங்கள் மண்டோவின் கதைகளில்
மைய்யமான உணர்நிலையுடன் வெளிப்படுவதால் அரசியல்
ரீதியாக பிரிவினை சம்பவத்திற்கு பின்னுள்ள ஒரு சிறிய அபத்த
(மண்டோவின் பாஷையில் ஹிப்டுல்லா) சம்பவத்தை
குறிப்பிட்டுவிட்டு இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

காந்தியினுடைய குரல் சிறிய பறவை கிரீச்சிடலை ஒத்திருந்தது.
ஜின்னாவையும், காந்தியையும் சேர்த்து நான் சந்திக்க
வைத்தபோது, இரண்டடி இடைவெளியில் அவர்கள்
அமர்ந்திருந்தும் கூட ஒருவரின் பேச்சை ஒருவர் கேட்க
முடியவில்லை... நான் அவர்களது நாற்காலிகளை இழுத்துச்
சேர்க்க வேண்டியிருந்தது.
- லாரி காலின்ஸ் ; டொமினிக் லேப்பியர் இந்தியா - பாக்.
பிரிவினைப் பற்றி மவுண்ட் பேட்டன் உரையாடிய
புத்தகத்திலிருந்து...

பின்குறிப்பு:
மண்டோவைப் பற்றி அ.மார்க்ஸ் மற்றும் ராமானுஜம் எழுதிய
இரு கட்டுரைகளுமே என் கட்டுரையின் பார்வையை மிகவும்
செழுமைப்படுத்தியவை. ஒரே ஒரு முரண்பாடு இரு
கட்டுரைகளிலுமே தமிழ் எழுத்தாளனை மண்டோவோடு ஒப்பிட்டு
விசனமடைந்திருந்தனர். இங்கு தமிழ் எழுத்தாளனின் வாழ்வியல்
பின்னணியையும், வரலாற்று சமூகச் சூழலையும் புரிந்து
கொண்டால் இப்படிப்பட்ட விசனங்கள் அவசியமில்லை. மண்டோ
போன்ற ஒரு படைப்பாளியோ, படைப்புகளோ தமிழ் சூழலிருந்து
வரும்போது நிலைமையும் பஞ்சாப், மகாராஷ்டிரம், குஜராத்,
வங்காளம் போன்ற மாநிலங்களில் கொதிநிலையை அடைய
வேண்டியிருக்கும். தமிழ் எழுத்தாளனின் மேன்மையான
படைப்புகளுக்காக தமிழகம் கலவரச் சூழல்களுக்கு
செல்லாமிருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாக
இருக்கவேண்டும். பெரும்பாலும் தமிழ் எழுத்தாளன் இரண்டு யதார்த்தங்களை அனுசரிக்கக் கூடியவனாய் இருக்கிறான். ஒன்று கதையை
உருவாக்கும் யதார்த்தம், அடுத்தது தன் பார்வையால் அதைக்
குறுக்கீடு செய்வது அல்லது மோதுவது அல்லது தொந்தரவு
செய்வது. இது நீதிக்கதைகளுக்கும் பொருந்தக் கூடிய
அமைப்பாக்கமே. இது குறைபாடாய் இங்கு சுட்டப்படவில்லை.
புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ராஜா
வந்திருக்கிறார் போன்ற சிறந்த சிறுகதைகள் இந்த அமைப்பைப்
பற்றிப் பேசும் போது ஞாபகத்திற்கு வருகின்றன.
பொதுவாய் தமிழ் எழுத்தாளன் சீர்திருத்தம் கண்களை
உடையவன். (உச்சபட்ச உதாரணம் ஜே.ஜே.) அவன் பெரும்பாலும்
சார்ந்திருக்கும் நடுத்தர வர்க்கப் பின்னணி இப்பார்வைக்கு
அடிப்படையில் இருக்கக்கூடும். குடும்பமும், வீடும் தான்
அவனுக்கு அரணாக, தீமையாக இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை
நிகழ்கிறது. தன் குடும்பத்தின் நீட்சியாகவே சாதி, சமூகம், அரசு,
தேசம், வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கு இவற்றை
அனுசரிக்கிறான் அல்லது விமர்சிக்கிறான். இப்புரிதலின் உச்சபட்ச
படைப்பொழுக்கு அல்லது வெளிப்பாடு என சுந்தர ராமசாமியின்
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலை நாம் தொடர்புறுத்த
இயலும்.
சமூக வெளியில் நிகழும் மாற்றங்கள், கலவரங்கள், அபத்தங்கள்
இவற்றை தன் - எப்போதும் ஆக்கிரமிக்கப்படாத,
சூறையாடப்படுவதற்கு வாய்ப்பில்லாத - வீட்டின்
சன்னலிலிருந்தே பார்க்கப்பழகியுள்ளது அவன் மனம். அவன்
உணரும் அச்சமும், பாதுகாப்பின்மையும், அசூயையுமே
வீடென்னும் நொறுங்காத கூட்டிலிருந்து அடையும் உணர்வே
அவனது எழுத்துக்கள். இதன் நேர்மையான உதாரணங்களாக
அசோகமித்திரன், கோபி கிருஷ்ணன் கதைகளையும்,
விக்ரமாதித்யன் கவிதைகளையும் பார்க்க இயலும்.

(2006-ல் எழுதிய கட்டுரை, புதிய காற்று இதழில் பிரசுரமானது)


உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள்:
1. விளிம்புநிலை ஆய்வுகள் - டேவிட் ஹார்டிமன் (நன்றி:
தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம்)
2. விலகி நடந்த வெளிகள் - அ. மார்க்ஸ்
3. டெஹல்கா இதழ்கள் - மும்பை சிறப்பிதழ் மற்றும்
பிரிவினை சிறப்பிதழ்)

Comments