Skip to main content

ஞாயிற்றுக்கிழமையன்று வருபவர்கள்



சில மாதங்களாகப் பார்க்கத் திட்டமிட்டிருந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தின் இறுதிப்பகுதியை நேற்று காலை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தேன். 21-ம் நூற்றாண்டில் வாழத் தகுதியற்றதாகிப் போகும் பூமியிலிருந்து,  மனிதர்கள் வாழ்வதற்கேற்ற கிரகத்தைத் தேடி, பல சிரமங்களைத் தாண்டி வெற்றியடையும் கதை அது. பதினெண் வயதுகளில் மகளையும் மகனையும் விட்டுப்போகும் வானவியல் விஞ்ஞானிகள் குழுவின் தலைவன் கூப்பர், மீண்டும் தனது மகளை செவ்வாய் கிரகத்தில் பார்க்கும்போது மகள் அவனை விட இரண்டு மடங்கு முதுமையில் மரணத்தின் வாசலில் இருக்கிறாள். குழந்தைகள் இறப்பதைப் பெற்றோர் பார்ப்பது கூடாதென்று அறிவுறுத்தி மகள் மர்ப் மருத்துவமனையிலிருந்து தந்தைக்கு விடைகொடுக்கிறாள் . ஒரு தந்தையாக அந்தக் காட்சியில் நான் உறைந்து கொண்டிருந்த போது, எங்கள் வீட்டு கேட்டிலிருந்து ‘அய்யா’ என்று தீனமாக கூப்பிடும் சத்தம் கேட்டது.
நாங்கள் வசிக்கும் மாடிவிட்டில் நான் அமர்ந்திருக்கும் கணிப்பொறிக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னலைத் திறந்தேன். இரு மனிதர்கள். ஞாயிற்றுக்கிழமையன்று வருபவர்கள் இவர்கள். சில ஒருவர் கையில் மண்வெட்டி. இன்னொருவரின் முதுகில் பருத்த ஸ்கூல் பேக்கை மாட்டியிருந்தார். வெள்ளைச் சட்டை, வேஷ்டி அணிந்திருந்த இருவரும் ஐம்பதைக் கடந்தவர்கள். முகத்தில் ஒரு வாரத்துக்கு மேலான தாடி. உலர்ந்த கண்கள், வெயில் பழுப்பேற்றிய முகம். அவர்களைப் பார்த்தவுடன் பக்கத்தில் அவர்களது வீடு இல்லை என்பது தெரிந்தது. ஒருவர் கையில் மண்வெட்டி. ‘செடி, புல்லை எல்லாம் வெட்டிச் சுத்தம் செய்துடலாமா’ என்று கேட்டார்கள். இதைப்போல பெண்களும் வந்து கேட்கிறார்கள். நாங்கள் இருக்கும் வீடு வாடகை வீடு. வீட்டு உரிமையாளர் தான் முடிவு செய்யவேண்டும். அத்துடன் இப்போதைக்கு இந்த வேலைக்கு அவசியமும் இல்லை. ‘வேண்டாம்யா’ என்று சொல்லிவிட்டு ஜன்னலை மூடினேன். திரும்ப ஜன்னலைத் திறந்து அவர்களைப் பார்த்தேன். அவர்கள் மேலே பார்த்தார்கள். இதேபோல வரிசையாக தெருவில் இருக்கும் அடுத்தடுத்த வீடுகளைப் பார்த்தார்கள். இது அவர்கள் வேலை கேட்ட முதல் வீடாக இருக்காது. அவர்கள் திரும்பி தெருவுக்கு வெளியே நடக்கத் தொடங்கினர்.
இதே போல கொஞ்சம் பழுப்பாகிவிட்ட வெள்ளை வேஷடி சட்டையுடன் நெய் நிறைந்த தூக்குவாளிகளுடன் ஒரு பத்து பேர் வீடெங்கும் வருகின்றனர். அவர்கள் வைத்திருக்கும் பொருளையோ உழைப்பையோ கௌரவத்துடன் வாங்குவதற்கு நகரத்தில் நபர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல நகரத்திலிருந்து விடுமுறைகளில் மனிதர்கள் வழிந்து வெளியேறும் சாலைகளில் விளக்குமாறு, நாட்டுக் கருப்பட்டிப் பெட்டிகளுடன் இவர்கள் நிற்கிறார்கள். ஒரு ஆலயத்திற்கு வெளியே பூவோ, ஒரு மருத்துவமனைக்கு வெளியே பழமோ விற்கும் பெண்ணிற்குள்ள வருவாய் உத்தரவாதம் கூட இவர்களுக்கு இல்லை. யாசகத்துக்கும் ஊழியத்துக்கும் இடையில் இவர் நிற்கிறார்கள்.  
திரும்புவதற்கான வீட்டின் தொலைவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களின் கவுரவமும் பேரம் பேசும் சக்தியும் குறைந்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. பீகாரிலிருந்து வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து இங்கே சில சப்பாத்திகளாகவும் கொஞ்சம் உருளைக்கிழங்கு, தக்காளியாகவும் ஆகும் அவர்களது வீடும் மிகத் தொலைவில் தான் உள்ளது

Comments