Skip to main content

Posts

Showing posts from October, 2017

தாமிரபரணி நால்வரின் இலக்கியச் சாதனை

ஷங்கர்ராமசுப்ரமணியன் மறுகரை தெரியாமல், பிழைப்போமா என்று அறியாமல் கலைநம்பிக்கை என்னும் சமுத்திரத்தில் குதித்துப் பயணத்தைத் தொடங்கியவர்களின் கதை இது . தொலைந்துபோன ஒரு கலாசாரத்தின் , ஒரு நிலவெளியின் , ஒரு காலத்தின் - நினைவுகளைக் குறியீடுகளாக, மொழியாக, சித்திரங்களாக மாற்றியவர்கள் இவர்கள் . பிறந்து, அதிகபட்சமாக முப்பது கிலோமீட்டர் சுற்றளவில் படித்து, எழுத்து , வாசிப்பு என்ற பொதுக்கனவில் சேர்ந்து, இளைஞர்களாக சந்தித்துப் பேசி பரஸ்பரம் ஈர்க்கப்பட்டவர்கள் இவர்கள் . கவிதை , சிறுகதை , நாவல் , விமர்சனம் என ஒரு மொழியில் சாதனையாளர்களாக இன்று திகழும் இந்த நால்வரின் வருகை , வேறு எந்த மொழியிலும் சாத்தியமாகாதது ;  அபூர்வத்தன்மைகொண்டதும்கூட . தமிழ் மொழியைப் பொறுத்தவரை இலக்கியத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுப்பவர்கள் இன்றைக்கும் குடும்பத்திலும் சமூகத்திலும் தனிமையையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்பவர்களே . நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சூழ்நிலை இன்னும் கடுமையானது . புதுமைப்பித்தனின் வழி, தனி இருட்டுதான் . இன்றுள்ள அள