Skip to main content

அம்மா அறியாதது


குழந்தைகளை
நீர் அழைக்கிறது
காலம் காலமாக
அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமல்
அம்மா வகுத்த எல்லைகளை மீறிப்போகும்
முதல் சாகசம்
முதல் ஏகாந்தம்
சொல்லிப்போக எல்லாக் குழந்தைகளும்
அந்தணகுமாரன் சித்தார்த்தனும் அல்ல
குழந்தைகளை நீர்துறைகள் கிளர்த்துகின்றன
வயிற்றில் பயம் நொதிக்கிறது
விரையும் கால்கள் பின்னுகின்றன
சில்லிட்ட கரங்களுடன்
தொலைவிலிருந்தே தண்ணீர் வருடுகிறது
எத்தனை பேர் திளைத்தாலும்
அத்தனை பேரும் தனியாகத்தான்.
அது
அவர்களுடன் என்றும் தொடரப்போகிறது
உச்சந்தலை கொதிக்க கண்கள் சிவக்க
அவர்கள் நீருக்குள்
அமிழ்ந்து அமிழ்ந்து
வெளியே வருகின்றனர்
பார்க்காத கருப்பு ஒன்றையும் பார்க்கின்றனர்
பகல் மங்க
அகாலம் நிழல்களை வரையும்.
உடனடியாக அம்மாவின் நினைவு
வா என்று கூப்பிட
பெரும்பாலான குழந்தைகள்
குற்றத்தின் ஈரத்தைப் பிழிந்து
அவளின் அரூபச் சொல்லுக்குப் பணிந்து
வீடு திரும்பி விடுகின்றன.  

Comments