Skip to main content

இந்த நாற்பது வயதில்

ஷங்கர்ராமசுப்ரமணியன்



இந்த வருடத்தின்
சுயமதிப்பீட்டுப் படிவத்தை நிரப்பி
மேலதிகாரியிடம்
கொடுத்துவிட்டு
கழிப்பறை சென்று
நிலைக்கண்ணாடியில்
முகம் பார்த்த போது 
பார்த்தேன்
நான் சலித்திருக்கிறேன்
எனது நரைமுடிகள் நீளமாகியிருக்கின்றன

ஏன்
இப்போதெல்லாம்
குழந்தைகள் பிறந்த தகவலை
நண்பர்கள் பகிரும்போதோ
தெரிந்த பெண்கள்
திருமணப் பத்திரிகை
தரும்போதோ
கண்கள் துளிர்க்கின்றன


புளித்த மாவு தோசையின்
மணமடிக்கும் போதெல்லாம்
செத்துப்போன என் பெரியம்மா
வீட்டுக்குள் நுழைந்து விடுகிறாள்

எல்லாம் நுரைத்திருக்கும்
என் இந்த நாற்பது வயதில்
ஏன் என்னைத் தனியாக
விட்டுப்போனாய்
பெரியம்மா









Comments