Skip to main content

Posts

Showing posts from May, 2015

ஒரு நிம்மதிக்கும் இன்னொரு நிம்மதிக்கும் நடுவே

ஷங்கர்ராமசுப்ரமணியன் கூப்பிடும் தூரத்தில்தான் நிற்கிறது காவலர் ரோந்து வாகனம் துப்பாக்கிகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன அப்போதைக்கு உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், தேவாலயம் எல்லாம் வெறும் நடைதூரத்தில் சிதறியிருக்கின்றன தாடி வைத்திருந்த அவன் இறுக்கமாய் அந்தத் தொழிற்சாலையின் இரும்புவேலிச் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கிறான் அவன் சட்டைக்குள் வலதுகை நுழைத்து ஏதோ ஒன்றை பொதிந்து மறைத்திருக்கிறான் அவன் மார்பைப் பிடித்து அதைக் கொடுத்துடுறா அதைக் கொடுத்துடுறா என அவள் தன் உடை குலைய எச்சிலும் கண்ணீரும் வழியக் கெஞ்சி இரைகிறாள்     ஒரு நிம்மதிக்கும் இன்னொரு நிம்மதிக்கும் இடையே கலவரத்தின் முனைகள் இருக்கும் அவற்றைக் கடந்துவிட வேண்டும் நழுவும் உலகை சாமர்த்தியத்துடன் பற்றிப் பிடித்து பொது இடங்களைக் கடக்கின்றனர் பொதுமக்கள் அச்சத்துடன் அவரவர் கவலைகளை ஒருமுறை  பார்த்துக் கொண்டு வீடு திரும்புகின்றனர் பரபரப்பான அந்த நடைபாதையில் தான் அவன் அசையாமல் நிற்கிறான் அவளது கோரிக்கையில் முன்பு அவர்கள் பகிர்ந்திருக்கக் கூடிய

நித்யா…அநித்யா

 ஷங்கர்ராமசுப்ரமணியன்        அவளுக்குப் பெயர்    மைசூர் சாண்டல்.    அம்மாவை டவ் ஷாம்பூ    என்று கொஞ்சுகிறாள்    பாட்டிக்கு பாண்ட்ஸ் பவுடர்    அன்பின் நிலைத்த உருவங்களுக்கு    அநித்யமாய் கரைந்துவிடும்    பொருட்களின் பெயர்களைச்    சூட்டுகிறாள்    நித்யா    அநித்யா  

இந்த நாற்பது வயதில்

ஷங்கர்ராமசுப்ரமணியன் இந்த வருடத்தின் சுயமதிப்பீட்டுப் படிவத்தை நிரப்பி மேலதிகாரியிடம் கொடுத்துவிட்டு கழிப்பறை சென்று நிலைக்கண்ணாடியில் முகம் பார்த்த போது  பார்த்தேன் நான் சலித்திருக்கிறேன் எனது நரைமுடிகள் நீளமாகியிருக்கின்றன ஏன் இப்போதெல்லாம் குழந்தைகள் பிறந்த தகவலை நண்பர்கள் பகிரும்போதோ தெரிந்த பெண்கள் திருமணப் பத்திரிகை தரும்போதோ கண்கள் துளிர்க்கின்றன புளித்த மாவு தோசையின் மணமடிக்கும் போதெல்லாம் செத்துப்போன என் பெரியம்மா வீட்டுக்குள் நுழைந்து விடுகிறாள் எல்லாம் நுரைத்திருக்கும் என் இந்த நாற்பது வயதில் ஏன் என்னைத் தனியாக விட்டுப்போனாய் பெரியம்மா