Skip to main content

ஞானக்கூத்தன் நேர்காணல் இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது








எள்ளல் மற்றும் சிரிப்பை தமிழ் புதுக்கவிதைக்குத் தந்தவர் அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதை வடிவத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர். விஷ்ணுபுரம் விருது   அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.. தி இந்து கலை இலக்கியம் இணைப்பிதழில் வெளியான நேர்காணலின் எடிட் செய்யப்படாத வடிவம் இது..

உங்களது சமீபத்திய பென்சில் படங்கள் கவிதை நூலில் உங்களது குழந்தைப்பருவம் மற்றும் இளம்பிராயத்து சித்திரங்கள் நிறைய இடம்பெறுகின்றன..

ஆறு, கடல், மரங்கள், விலங்குகள், கோவில்கள் எல்லாமே ஒரு குழந்தைக்கு முதல் முறையாக அறிமுகமாகிறது. அவைதான் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதிலிருந்து தான் உலகத்தை ஒரு குழந்தை புரிந்துகொள்கிறது. வளர வளர இன்னொரு உலகம் அந்தக் குழந்தைக்கு அறிமுகமாகிறது. ஏற்கனவே மனதில் இருக்கும் உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது இன்னொரு உலகத்தைப் புரிந்துகொள்கிறது. வாலிப வயதில்  எதிர்பாலினம்,குடும்பம், அதைக் கட்டுப்படுத்தற சமூகம், சமூகத்தைக் கட்டுப்படுத்தற நாடு,மொழி எல்லாம் பற்றிய அறிவு ஏற்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையும் எப்படி கட்டுப்படுத்தி, சமரசம் செய்து ஒரு ஒழுங்கை நிலைநிறுத்தப் பார்க்கிறது என்பதை தெரிந்துகொள்கிறான். 5 வயதிலிருந்து 21 வயது வரை ஒருவருக்கு முக்கியமான காலம்.

உங்கள் கவிதைகள் மரபுத்தமிழ் கவிதையின் ஓசையைத் துறக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

நான் ஒரு கோவிலுக்குப் பக்கத்தில் பிறந்துவளர்ந்தேன். அது வைஷ்ணவக் கோவில். அதற்குப் பக்கத்தில் சைவக் கோவில்.  அர்த்தம் விளங்குவதற்கு முன்பே  பாசுரங்கள், பிரபந்தங்கள் மற்றும் பதிகங்கள் அறிமுகமாகி விட்டன. அவைதான் என்னைக் கவிதையை நோக்கித் தூண்டின.

உங்கள் நோக்கில் புதுக்கவிதை நிலைபெற்ற கதையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்..

1958-ல் க.நா.சுப்பிரமணியன், சரஸ்வதி இதழில் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது இருந்து வந்த திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்கக் கவிதைகளுக்கு மாற்றாக ஒரு கவிதை வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது. பாரதிதாசனுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் இருந்த வேளை அது. அந்த வெற்றிடத்துக்குக் காரணம் பாடுபொருள் இல்லாமைதான். அது ஏற்கனவே நிர்ணயமாக இருந்தது. ஒன்று கட்சியைப் பற்றி எழுதவேண்டும். இல்லையெனில் பொதுவுடைமைக் கொள்கைகளை எழுதவேண்டும். இல்லையெனில் தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்துக்கவிதை எழுதவேண்டும். அப்போது கவிதைகள் கல்கி மற்றும் கலைமகளில் பண்டிகை நாட்களில் மட்டுமே பிரசுரிக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் புதிய கவிதை எப்படி இருக்கவேண்டும் என்று எழுதினார். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்றார். உரைநடையில் எழுதினால் தமிழ் புலவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து விடமுடியும் என்ற கருத்தை க.நா.சுவோடு சேர்ந்து பிச்சமூர்த்தியும் வைத்தார். 1959 ஜனவரி மாதம் எழுத்து இதழ் வெளிவருகிறது. அதில் புதுக்கவிதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்கள். பத்து பேரோ, நூறு பேரோ படித்தால் போதும் என்ற நிலையில்தான் இந்த இயக்கம் தொடங்கியது.

 நீங்கள் நடை பத்திரிகையில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கவிதைகளை புதுக்கவிதை இல்லை என்று விமர்சனம் எழுந்ததே?

மரபை நான் புதுப்பிக்கிறேன் என்றும் மரபை நான் விடவில்லை என்றும் சொன்னார்கள். நகுலன் என்னை புதுக்கவிஞன் இல்லை என்று சொன்னார். சி.மணியும் சொன்னார். க.நா.சுவுக்கு என்னுடைய கவிதைகள் ஏற்புடையதாக இருந்தது. இவருக்கு இடைக்கால யாப்பே போதுமானதாக இருக்கிறது என்று சொன்னார். சுந்தர ராமசாமியிடமும் ஒரு உரசல் இருந்தது. அது ரொம்ப நாள் கழித்து சரியாய் போச்சு.

 நீங்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ‘கசடதபற’ பத்திரிகை தொடங்கியதற்கான நோக்கம் என்ன?

கவிதையை விடுதலை செய்வது. தமிழை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்தது. அதில் தமிழை எங்கே நிறுத்தலாம் என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன். சந்தியில் நிறுத்தாமல் இருந்தால் போதும் என்று சுஜாதா எழுதினார். பெரிய பத்திரிகைகளில் இருந்து கவிதைகளை விடுவித்து சுதந்திரமாக எழுதவேண்டும் என்று விரும்பினோம். மொழி, நாடு, மதம்,மக்கள் என்று பேதம் பார்க்காமல் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கும் கவிதைகளை எழுதவேண்டும் என்று நினைத்தோம். நான், ஆத்மாநாம், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், தேவதச்சன் எல்லாரும் சேர்ந்து ஒரு இயக்கமாக ஆனோம். அப்போதுதான் புதுக்கவிஞர்களை தனிநபர் வாதிகள் என்று வானம்பாடிக் கவிஞர்கள் எங்களைத் திட்டத்தொடங்கினார்கள். இப்படி கசடதபற வழியாக நவீன இலக்கியத்திற்கான கால்கோள் விழா நடந்தது.

புதுக்கவிதைகளை நீங்கள் எழுதத் தொடங்கும்போது உங்களுக்கு இருந்த எண்ணங்கள் என்னவாக இருந்தது?

கவிதை என்பதன் அடிப்படையில் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய கவிதைகள் நாம் எழுதவேண்டிய கவிதைகளுக்கு உறுதுணையாக இருக்கப்போவதில்லை என்ற எண்ணம் தெளிவாக இருந்தது. பாரதியாரின் கவிதைகளையும் சேர்த்தே சொல்வேன். அவருடைய கவிதைகள் உயர்வானவை என்றே கருதுகிறேன். ஆனால் நான் பார்க்கும் உலகம் அவரிடம் இல்லை. பாரதியார் காலத்தில் பேருந்து இருந்தது. ரயில் இருந்தது. சினிமா அறிமுகம் ஆகிவிட்டது. ஆனால் யதார்த்த உலகம் அவரிடம் இல்லவே இல்லை. புதுக்கவிதை யதார்த்த உலகத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.  பாரதிதாசனிடம் இனரீதியான விருப்பு வெறுப்பு கருத்துகள் இருந்தன. கட்சி சார்பில்லாமல் மனிதனின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும் என்பது எனது கருத்து. அதைத்தான் நான் ஏற்பியல் என்று சொன்னேன். அழகியல் என்பதைவிட ஏற்பியல் என்பது அர்த்த நெருக்கம் கொண்டதாக இருக்கிறது. குரங்கில் அழகான குரங்கு கிடையாது என்பது நமது பார்வையாக இருக்கலாம். ஆனால் குரங்குகளுக்குள் அழகானது என்பது உண்டு. நமது சமூகம் பலவிதமாக பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினைகளை அதிகம் வலியுறுத்தாமல் ஒரு பொதுத்தன்மையைக் கவிதையில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.



நீங்கள் உங்கள் இளம்பருவத்தில் தமிழரசுக் கழக ஆதரவாளராக இருந்தீர்கள்…அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்..

1952 ஆம் ஆண்டு எனக்கு 14 வயது. இலக்கணம் எல்லாம் தெரியாமலேயே கவிதைகள் எழுத தொடங்கிவிட்டேன். காவிரி தஞ்சை மாவட்டத்தில்தான் உற்பத்தியாகிறது என்று நம்பியிருந்தேன். எங்கள் ஊர் கோவில் கோபுரம் தான் உலகிலேயே பெரியது என்று நினைத்திருந்தேன். அப்போதுதான் ம.பொ.சி எங்கள் ஊருக்கு வந்தார். அவர் திராவிட இயக்கத்துக்கு எதிராகப் பேசினார். தமிழ்நாடு என்பது தனி, சுயநிர்ணயம் வேண்டும் என்றார். உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குத் தோள்கொடுப்போம் என்று பேசினார். அவரைத் தாக்கினார்கள். அந்தக் கூட்டத்தில் நான் இருந்தேன். அவர் மூலமாகத் தான் தமிழ்நாடு என்ற ஒன்று இருக்கிறது, அதற்கு எல்லைகள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அவர் பேச்சு என்னைக் கவர்ந்தது. தமிழ் நாட்டில் தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று அவர் சொன்னது எனக்கு பிற்பாடு திருப்திகரமான விளக்கமாக இருந்தது. ஆரிய-திராவிடர் பிரச்சினை வரும்போது, பிராமணர் எல்லாம் ஆரியர்கள் என்று சொன்னார்கள். அது எனது மனதை இரண்டுகூறாக உடைத்துப் போட்டது. நாம் நம்மைப் பற்றி ஒன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மனம் பிளவுபட்டு விடும். அந்த நிலையில் ம.பொ.சியின் வரையறை தான் எனக்கு ஆறுதலைத் தந்தது.

திராவிட அரசியல் தமிழ் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கங்களை உங்கள் கவிதைகளில் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்…அதற்காகவே அதிகம் அறியப்படவும் செய்கிறீர்கள்..

நான் திராவிட இயக்கத்தின் கருத்துகளை எதிர்த்து எழுதியதேயில்லை. மேடையில் ஒரு பேச்சாளன் பேசுகிறான். அவன் திமுகவாக இருக்கலாம், காங்கிரஸ்காரனாக இருக்கலாம், அவன் பொதுமனிதனின் பார்வையில் எப்படிப் படுகிறான் என்பதே எனது கவிதையின் கவலையாக உள்ளது. திராவிட இயக்கத்தின் தாக்கம் காரணமாக பிராமணப் பண்பாட்டிலேயே பல விஷயங்கள் கைவிடப்படுவதையும் நான் கவிதைகளில் எழுதியிருக்கிறேன். இவையெல்லாம் தனிமனிதனின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதன் மீது எனது கவிதைகள் கவனம் செலுத்துகின்றன. தனிப்பட்ட குடிமகனாக திராவிட இயக்கங்களால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் பெரிதாக விளையவில்லை என்பதே எனது கருத்து. அவர்களால் பண்பாடு போச்சு. மக்களிடத்தில் வேற்றுமை பெருகியது. ஆரியர்-திராவிடர் என்று சொல்லி மக்கள் அடையாளங்களைக் குழப்பினார்கள். பிராமணர்- பிராமணல்லாதார் என்று சொல்லி அதையும் குழப்பிவிட்டார்கள். பிராமணர் அல்லாத மேல்சாதியினர் மேடையில் இருந்தார்கள். கீழே இருந்து பேச்சைக் கேட்டவர்கள் எல்லாம் அடித்தட்டு சாதியினர். அவர்களுக்கு இவர்கள் பொழுதுபோக்கையே கொடுத்தார்கள். அவர்களது வாழ்க்கை மாறவில்லை. திராவிட அரசியல் கூட்டங்களில் பொழுதுபோக்கு மதிப்பைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. இட ஒதுக்கீடு போன்ற கொள்கைகளில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடைமுறைப்படுத்தியிருக்கும்.

உங்கள் கவிதைகளில் மனிதன் குறையுள்ளவனாக இருக்கிறான். கடவுள் நடராஜர் மேஜை நடராஜராக குறும்வடிவம் எடுக்கிறார். கடவுள் ஓட்டை தேவனாராக வருகிறார்.. நவீன வாழ்வை உங்கள் கவிதைகள் குறைபாடுள்ளதாக, அபத்தமாகப் பார்க்கிறதா?

பல நூற்றாண்டுகளாக ஒரு பண்பாடு காக்கப்பட்டு வந்தது. இன்று நாம் பேசுகிறோம். ஆரியர்கள் ஆதிக்கம், இஸ்லாமியப் படையெடுப்பு, தலித்களின் அடிமைநிலை, பெண் அடிமைப் போக்கு என நாம் இன்று பேசும் எல்லாமே ஒரு நெடிய கால வரலாற்றை முன்னிறுத்திப் பேசுபவை. ஆனால் ஒரு முழுவாழ்க்கை உடைந்துபோய்விட்டது. தொட்டால் பால்திரியற மாதிரி எல்லாமே இடிந்துபோய்விட்டது. எனது கவிதைகள் இடிந்ததை, உடைந்ததைப் பேசுகின்றன. கீழ்வெண்மணியில் கொளுத்தப்பட்டதைப் பேசுகிறேன். மனிதன் பசியோடு இருக்கிறான். ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனிதன் அனுபவிக்கும் கஷ்டத்துக்கு முன்வினைப் பயன் என்ற நம்பிக்கையாவது இருந்தது. அதையும் அவனிடம் இருந்து பறித்துவிட்டோம்.  உனது துயரத்துக்கு  நீதான் பொறுப்பு என்று சொல்லிவிட்டோம். அப்போது இயற்கையாகவே மோதல் உருவாகிவிடுகிறது. ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவர்களைத் தாக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. திருப்பனந்தாள் மடத்தில் உ.வே.சா ஆசிரியராக இருந்தபோது தனியாகத்தான் சாப்பிட்டார். அதை அப்போது அனுமதித்தார்கள். இப்போது அது சாத்தியம் இல்லை.

மக்கள் போராடக்கூடாது என்கிறீர்களா?

 எதுக்கெடுத்தாலும் இன்று பிரச்சினைதான். இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளப் போராடுகிறோம். போராடினால் ஒரு வீரியம் வருகிறது. உலகம் எங்கும் உள்ள போராளிகள் சேர்ந்து  சேகுவேரா பனியனைப் போட்டுக் கொண்டால் நமக்கு ஒரு சந்தோஷம். ஆனால் அது எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் நான் விடுபட்ட நரிகள் கவிதையில் எழுதினேன். நிறைய மனிதர்கள் விடுபட்டுப் போய்விடுகிறார்கள். இடிபட்ட கோயிலின் கடவுளே என்று தாகூர் சொல்வார். கவிதையும் இடிந்துபோய்விட்டது. இடிபாட்டுக்கிடையில் இருப்பதுதான் எனது கவிதை என்று நினைக்கிறேன்.



இன்றைய சமூகத்தில்  புதுக்கவிதைக்கான இடம் எது?

கவிதைக்கான இடம் இருக்கிறது. ஆனால் எங்கே இருக்கிறது என்று கேட்க க்கூடாது. இன்னும் கவிதை அபாயகரமான இடத்தில்தான் உள்ளது. புதுக்கவிதை படிப்பவர்களின் மனதை மாற்றுகிறது. மௌனி,  ந.முத்துசாமி, கோணங்கி, தமிழவன், பா.வெங்கடேசன், ஜெயமோகன் போன்றவர்களின் உரைநடையில் புதுக்கவிதையின் பாதிப்பை பார்க்க இயலும். புதிதாகச் சொல்வது, வித்தியாசமாகச் சொல்வது என்பதை புதுக்கவிதைதான் தொடர்ந்து சவாலாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

உலகக் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவர் நீங்கள்… அந்த ரீதியில் இன்றைக்குள்ள தமிழ் புதுக்கவிதை எப்படியாக இருக்கிறது..

மற்ற நாடுகளில் எழுதப்படும் நல்ல கவிஞர்களோடு ஒப்பிட்டால் இங்கே பத்து, பதினைந்து பேரைச் சொல்லமுடியும். யூமா வாசுகி, யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, அய்யப்ப மாதவன், மாலதி மைத்ரி, பெருந்தேவி போன்றவர்கள் குறிப்பாக ஞாபகத்திற்கு வருகின்றனர். யவனிகா மற்றும் தேவேந்திர பூபதியிடம் இன்றைய கவிதைக்கான முன்வடிவம் கிடைக்கிறது. விகடன் போன்ற பத்திரிகைகளிலும் நல்ல கவிதைகள் கிடைக்கிறது.

உள்ளடக்க ரீதியில், சொல்லல் முறையில் என்னவிதமாக புதுக்கவிதை மேம்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

 கவிதைகளில் சமயம் போய்விட்டது. உலகத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவு பற்றிய பார்வை இல்லை. ஒரு பொருள் ஏகத்தன்மை உடையது அல்ல. அதில் இன்னொரு பொருளின் சாயலும் இருக்கும்.  உலகத்துக்கும் எனக்கும், எனக்கும் மிருகங்களுக்கும், எனக்கு பக்ஷிகளுக்கும் உள்ள பேதாபேதங்கள் ஆகியவற்றை ஆழ்ந்து பார்க்கவேண்டும். அஃறிணைப் பொருட்களைக் கூட நாம் நம்முடையது என்று சொல்கிறோம். இந்த உறவுகள் எப்படி வருகிறது. எனது குவளையை நீங்கள் எடுத்துச் சென்றுவிடலாம். எனது கையை எடுத்துச் செல்லமுடியாது. ஆனால் எனது குவளையை நீங்கள் உடைத்தால் எனது கையை உடைப்பது போல கத்துகிறேன். ஏன்? சமயம் என்பது கடவுளை வழிபடுவதைச் சொல்லவில்லை. தத்துவ விசாரங்கள் போய்விட்டது. கடவுள் வழிபாட்டை எதிர்த்தவுடன் தத்துவத்தையும் விட்டுவிட்டார்கள். ஆனால் அது தேவை.   

Comments