Skip to main content

எங்கும் மௌனம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்


எங்கும் குளிர்
கொஞ்சம் மிச்சம் இருக்கும் வேளையாக
இந்த விடியல் இருக்கிறது
உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்
இடையில்
வீடுகள் சோம்பல் முறிக்கின்றன
நடுவயதுக்காரர்களின் காலைநடை ஓசைகள்
குழந்தைகளைக் குளியலறைக்கு விரைவுபடுத்தும்
அம்மாக்களின் வசைகளைத் தவிர
காற்றில் வேறு எந்த மாசும்
கலக்காத புனிதவேளை அது
மாடிப்படிகள்
இலைகள்
பாத்திரங்கள்
நமது செயல்கள்
மீது இன்னும் இருட்டும் மௌனமும்
சூழ்ந்திருக்கிறது
முதியவர்கள் மட்டும்
நுரையீரல் மீது வெயில் அடிப்பதற்காக
பால்கனிகளில் காத்திருக்கின்றனர்.


Comments