Skip to main content

அது ஒரு குறைகணம்



ஷங்கர்ராமசுப்ரமணியன்
                ஓவியம்: வினுபவித்ரா

உன் குஞ்சுகளை
உனது சிறகுகளுக்குள் இயல்பாக
அரவணைத்து அள்ளிக்கொள்ளும் பொழுதில்
உயிரும் அன்பும் கலந்த அமிழ்தை
ஒரு கணம் பருகுகிறாய்
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்
திருக்குறளையும் சேர்த்து
சுவைக்கிறாய்
அது ஒரு குறைகணம்
குழந்தைகளின் மென்சிறகுகளை
கோதியபடியே
உன் கற்பனை மெல்லக் கலங்குகிறது
உனக்கும்
எல்லாருக்கும் நிச்சயமாகக் காத்திருக்கும்
மரணத்தை
மனதில் ஒத்திகை செய்யத் தொடங்குகிறாய்
நீ
நான் 
என்ற இருப்பின்
கசப்பு இதுதான்.

Comments

Ramjee said…
அருமையான வரிகள்...

வலிக்கின்றது!