Skip to main content

சிறந்த சமூகவியல் எழுத்துகள் அழகாக எழுதப்பட்டவை தான்- ஆ. இரா. வேங்கடாசலபதி



 காலனிய வரலாற்றாய்வாளர்கள் வட்டத்தில் இந்தியாவிலிருந்து மதிக்கப்படும் பெயர்களில் ஒன்று இவருடையது. பாரதியார், வஉசி, புதுமைப்பித்தன் ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களை உருவாக்கியவர். நவீன தமிழ் சமூக உருவாக்கம் குறித்து இவர் எழுதிய அந்தக் காலத்தில் காப்பி இல்லை கட்டுரைகள் ஆய்வுநுட்பத்தையும் தாண்டி புனைவு போல வாசிப்பதற்கும் சுவாரசியமானவை. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய போது த சன்டே இந்தியனுக்காக எடுத்த நேர்காணல் இது...



17 வயதிலேயே வ உசியின் கடிதங்களை பதிப்பித்துவிட்டீர்கள்... பெரிய வாய்ப்புகள் இல்லாததாக கருதப்படும் வரலாற்று ஆய்வில் இத்தனை ஈடுபாடு வருவதற்கான காரணம் என்ன?

ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் சிறுவயதில் இருந்தது. ஆனால் அதை செய்யக்கூடிய எந்தவகை ஆற்றலும் என்னிடம் இல்லை. எதிலும் நான் முதன்மையாக இருந்தது இல்லை. அப்போதுதான் புத்தகவாசிப்பில் ஈடுபாடு வந்தது. ஆங்கிலப்படிப்பில் இருந்து தமிழ்படிப்பின் மேல் காதல் ஏற்பட்டது. நான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்ததால் பாடப்புத்தகங்களில் தமிழகத்தைப் பற்றி ஒரு செய்தியும் இருக்காது. கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன் ஆகியோர் பற்றியே குறிப்பிடப்பட்டிருக்காது. பள்ளிக்கு வெளியில் இவர்களைப் பற்றி படிக்கத் தேடும்போது நம்பகமான வரலாறோ ஆவணங்களோ இல்லை என்பது தெரிய வந்தது. அப்போது பிரிட்டீஷ் கவுன்சில் நூலகத்தில் கீட்சின் கடிதங்கள் தொகுப்பைப் படித்தேன். அது மிகவும் பிரமாதமான அனுபவத்தைத் தந்தது. ஃபேனி ப்ரவுன் என்ற அவருடைய காதலிக்கு எழுதிய 29 கடிதங்கள் அவை. 200,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் எழுத்துகள் எல்லாம் மேற்கில் சாதாரணமாக கிடைக்கிறது. அப்போதுதான் பாரதியின் கடிதங்களைத் தொகுப்பாகப் பார்த்தேன். 1982 டிசம்பரில் அந்தப் புத்தகம் எனக்கு கிடைத்தது. 21 கடிதங்கள்தான் அவை. ஆனால் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அந்தக்கடிதங்களின் தொகுப்பு தந்தது. பாரதி தனக்கு காசு இல்லை என்று நெல்லையப்பருக்கு எழுதும் கடிதத்தில் கூட அவரது எழுத்துவன்மையும் கம்பீரமும் இருக்கும். பெரியாரின் நண்பரான தங்கபெருமாள் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தனக்குப் பணம் தருவது தேசியப்பணி என்று குறிப்பிடுகிறார். வஉசியின் கதையைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் நான் வ..சியின் கடிதங்களைத் தேடிப்போனேன். அந்தகட்டத்தில் எனக்கு 43 கடிதங்கள் கிடைத்தன. அதில் சரிபாதிக் கடிதங்கள் தனிப்பட்டவை. மற்றவை மிகவும் முக்கியமானவை. அடிப்படையில் வ உசியின் வரலாற்றை எழுதணும்ங்கிறதான் என்னுடைய நோக்கம்.

வ உசி மேல் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

வ உ சி யின் வாழ்க்கையை மேலோட்டமாக தெரிந்தவர்கள் கூட அவர்மேல் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கமுடியாது. கப்பலோட்டிய தமிழன் என்ற உருவகம் என்னை ஈர்த்தது. கப்பலோட்டிய தமிழன் சினிமாதான் என்னை வஉசியை நோக்கி ஈடுபடவைத்தது. ஆலந்தூர் மதி திரையரங்கில் 1982 இல் அந்தப்படத்தைப் பார்த்தேன். நூறாண்டுகளுக்கு முன்னால் வெறுமனே மெட்ரிகுலேஷன் முடித்த ஒரு நபர் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து ஒரு கப்பலை வாங்கி சுதேசிய வணிகம் என்ற கனவை நனவாக்குகிறார். . . சி தொடர்பு கொள்ளாத அரசியல் இயக்கமே தமிழ்நாட்டில் கிடையாது. பெரியாருக்கு நண்பர் அவர். திராவிட இயக்கத்துக்கு நெருங்கியவராக பார்ப்பனல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்தவராக அறியப்பட்டவர். சொல்லப்போனால் இவருக்கு சிலை வைக்கக்கூடாது என்று கூறி, பெரிய தகராறெல்லாம் சத்தியமூர்த்தி பவனில் நடந்துள்ளது. .பொசி அதைமீறித்தான் சிலை வைத்தார். இப்போது அவர் சிலை அங்கே கிடையாது. இந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரனுக்கு ஏன் சிலை வைக்கணும்னு அப்போதே எதிர்ப்பு எழுந்தது. 1908 இலிருந்தே அவர் தொழிலாளர் இயக்கங்களுடன் தீவிரமாக இயங்கியிருக்கிறார். தமிழ் இலக்கிய, சைவ மறுமலர்ச்சி சிந்தனை இயக்கங்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. இப்படியான பின்னணியில் வ..சியைப் புரிந்துகொள்வதென்பது, தமிழ்நாடு நவீன சமூகமாக மாறக்கூடிய மூழு காலகட்டதத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடியது. இப்படியாகத்தான் பாரதி தொடர்பான தேடல் தொடங்கியது. . வ உ சி வரலாறு நூலும் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் முடிந்துவிடும்.

பாரதியார் படைப்புகளை தேடும் பணியில் இன்னும் மீதமுள்ளவை உள்ளனவா?

பாரதியினுடைய எழுத்துகள் இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை. பாரதியின் இந்தியா பத்திரிக்கையின் ஒரு ஆண்டு பிரதிகள் கிடைக்கவேயில்லை. அது மிகவும் முக்கியமான காலகட்டமும் கூட. சுதேசி இயக்கத்தின் உச்சகட்டமான காலத்தில் வந்த அந்த இதழ்கள் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் இருந்து நடத்திய பத்திரிக்கையான விஜயாவின் 150 இதழ்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் நடத்திய ஆங்கிலப்பத்திரிக்கையின் பிரதிகளும் இன்னமும் கிடைக்கவில்லலை. சீனி. விசுவநாதன் பாரதியின் எழுத்துகளை காலவரிசையில் செய்திருக்கும் பணி மிகப்பெரிய சாதனை. ஆனால் இன்னமும் அந்த தொகுப்பைத் தாண்டிப்போக நம்மால் முடியவில்லை. தமிழ்சூழலில் அதைத்தாண்டுவது மிகவும் சிரமமான காரியமும் கூட

புதுமைப்பித்தன் படைப்புகளை பதிப்பிக்கும் பணியில் செம்பதிப்பு என்ற பிரயோகத்தைப் பயன்படுத்தினீர்கள். அது சர்ச்சைகளுக்கும் உள்ளானது.. தமிழ் சூழலில் செம்பதிப்புகளின் தேவை பற்றி கூறுங்கள்?

முதலில் நான் அந்த சொல்லைப் பயன்படுத்தவேயில்லை. முதலில் புதுமைப்பித்தனின் கதைகளையும் படைப்புகளையும் புத்தகமாக தொகுக்கும்போது பதிப்பு என்ற விஷயம் முன்வரக்கூடாது என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. வாசகர்களுக்குப் பயன்படும்படியாக புதிய சூழல்களில் புதுமைப்பித்தன் படைப்புகளை முன்னிறுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் பதிப்பு நம்பகமாக இருக்கவேண்டும் என்றவகையில் தான் புதுமைப்பித்தன் நூல்களைக் கொண்டுவந்தோம். இன்று புதுமைப்பித்தன் வெள்ளாளர் சார்பானவரா, சிறுபான்மையினருக்கு எதிரானவரா, தலித்விரோதியா போன்ற கேள்விகள் உள்ளன. இதற்கு பதில் சொல்ல பதிப்பு நம்பகமாக இருக்கவேண்டும். அதற்கு காலவரிசையில் தொகுக்க வேண்டுமென முடிவுசெய்தோம். வெவ்வேறு காலத்தில் அவர் படைப்புகள் பதிப்பிக்கப்படும்போது பாடங்கள் மாறுகிறது. அதை சரிசெய்யவேண்டும். புத்தகத்தின் முகப்பில் என் பெயர் இடம்பெறக்கூடாது என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. முதலில் வெளியான அன்னை இட்ட தீ புத்தகத்தின் முகப்பில் எனது பெயர் கிடையாது. ஆனால் புதுமைப்பித்தன் சிறுகதைகளைத் தொகுக்கும்போது எனது உழைப்பைப் பார்த்த கண்ணன் எனது பெயரை முகப்பில் அச்சிட்டுவிட்டார். அதன்பிறகு காலச்சுவடு எதிர்ப்பாளர்கள், எனது எதிர்ப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். அந்தக்கூட்டத்தில் தான் செம்பதிப்பு என்ற வார்த்தையை பிரபலமாக்கினார்கள். என்னைப்பொறுத்தவரை ட்ராட்ஸ்கியின் பெயர் அவருடைய அப்பா அம்மா வைத்தது கிடையாது. சிறையில் விட்ட பெயர். கருப்பர் என்ற பெயரை அம்மக்களை வெறுப்பவர்கள்தான் வைத்தார்கள். எதிரிகள் என்ன பெயர் சொல்கிறார்களோ அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் செம்பதிப்பு என்று பெயர் பெற்றுவிட்ட என்றுதான் அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. எனது பார்வையில் கோளாறு இல்லாத நம்பகமாக ஒரு நூல் இருந்தால் அதுதான் செம்பதிப்பு. என்னைப் பொறுத்தவரை பதிப்பு, பதிப்பாசிரியன் என்பது முன்னிலைப்படுவது ஆரோக்கியமான சூழல் இல்லை. ஒரு எழுத்தாளனின் படைப்பை சிறப்பாக தொகுத்துப் பதிப்பித்தவர் யார் என்பது ஒரு சிறுவட்டாரத்திற்கு தெரிந்தால் போதுமானது.
உங்கள் வழிகாட்டிகள் யார்?

முகம் மாமணி தான் என்னுடைய முதல் குருநாதர். அவர்தான் வாசிப்பதற்கு புத்தகங்களைத் தந்தார். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் நடத்துவார். மு.வ பற்றிய கூட்டம் எனில் கூட்டத்திற்கு முன்பு மு.வ எழுதிய புத்தகங்களில் முக்கியமான இரண்டு புத்தங்களைக் கொடுத்து அவற்றைப் படித்து இரண்டு மூன்று பக்கங்கள் எழுதிவரச் சொல்வார். முதல் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் அழைக்கப்பட்ட பேச்சாளர் பேசுவதற்கு முன்பு புதிய மாணவர்கள் தங்கள் கட்டுரையை வாசிக்கவேண்டும். அந்த கூட்டத்தில் 15 பேர் முதல் 25 பேர்தான் கலந்துகொள்வார்கள். தொடர்ந்து சிறிய கூட்டங்களை ஒழுங்காக நாம் நடத்தினால் அதன் தாக்கம் மிகப்பெரியது என்று அந்த கூட்டங்களில் இருந்து தெரிந்துகொண்டேன். 5 லட்சம் பேர் பங்குபெறும் கூட்டத்தை விட அதன் தாக்கம் மகத்தானது. ஒப்பிடவே முடியாது. முகம் மாமணி நடத்திய கூட்டத்தில் தொமுசி ரகுநாதன் பேசியதன் வாயிலாகத்தான் அவர்மீது மிகப்பெரிய மதிப்பும் புதுமைப்பித்தன் குறித்த அறிமுகமும் ஏற்பட்டது. தொமுசி ரகுநாதன் என்னைத் தூண்டிய மிகப்பெரிய ஆளுமையாக மாறினார். இப்போது ரகுநாதனின் பல முடிவுகளில், பார்வைகளில் உடன்பாடு இல்லை. ஆனால் அவரது எழுத்துகள் எனக்கு இன்னமும் மலைப்பை ஏற்படுத்துபவை.

இன்று வேகவேகமாக தமிழில் புத்தகங்கள் அடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு க் கொண்டிருக்கின்றன. ஒரு பதிப்பாசிரியராக இப்போக்கை எப்படி கவனிக்கிறீர்கள் ?

தமிழில் செம்மையான பதிப்புக்கென்று ஒரு மரபு உள்ளது. தாமோதரன் பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, .வே.சாமிநாத ஐயர் என்று நிறைய சிறந்த பதிப்பாசிரியர்கள் தொடர்ந்து இருந்துவந்துள்ளனர். அவர்களெல்லாம் அதற்குரிய அங்கீகாரத்தை புலமை வட்டாரத்திலும் பெற்றிருந்தார்கள். பதிப்பு என்பது தலைவலியான வேலையும் கூட. மிகவும் நேரம் செலவழிக்கவேண்டிய பயிற்சித்திறன் தேவைப்படும் பணி அது. ஒரு நூல் நன்றாக இருந்ததெனில் யாரும் பாராட்டவும் மாட்டார்கள். அதற்கான அவசியமும் வாசகனுக்கு இல்லை. ஒரு நூல் என்றால் அது நன்றாகத்தான் இருக்கவேண்டும். தவறாக இருக்கும்போது சுட்டிக்காட்டுவார்கள். இந்த விளைவுக்கு பதிப்பாசிரியன் தயாராக இருக்கவேண்டும். ஆனால் அதற்கு யாரும் இன்றைய சூழலில் தயாராக இல்லை.
20 ஆம் நூற்றாண்டின் சிறந்த நூல்கள் பத்தைப் பட்டியல் போட்டீர்கள் எனில் திருவிக வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூல் இடம்பெறாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் 1995 வரை அந்த நூல் மூன்றே பதிப்புகள் தான் வெளியாகி இருந்தது. அவர் உயிருடன் இருந்த போது 1944 வெளிவந்த பதிப்பு ஒன்று. 69 இல் சுப்பையா பிள்ளை வெளியிட்ட பதிப்பு ஒன்று. 82 இல் சைவசிந்தாந்தக் கழகம் வெளியிட்டது. அதற்குப்பிறகு நாட்டுடைமை ஆக்கப்படும் வரை கிடைக்கவேயில்லை. மயிலை. சீனிச்சாமியின் நூலென்று பார்த்தீர்கள் எனில் துணைப்பாட நூல்களாக என்.சிபிஎச் சும், கழகமும் வெளியிட்ட சில நூல்களே கிடைத்தன. முக்கியமான நூல்களே கிடைக்காமல் இருந்தன ஒரு காலத்தில். ஆனால் கடந்த 10,15 ஆண்டுகளில் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வரவேறபுக்குக்குரியது. முன்பெல்லாம் ஒரு அரிய நூலை வைத்திருந்தவன் அறிஞனாக இருந்தான். ஏனெனில் மற்றவர்களிடம் அந்தப் புத்தகம் இல்லை. இந்த சூழ்நிலை மாறியது. புத்தகங்களைப் பதுக்கி வைக்கமுடியாது. இன்று பாவாணர், திருவிக, .மு.வேங்கடசாமி நாட்டார் அனைவருடைய புத்தகங்களும் கிடைக்கின்றன. முன்பு தீபம் இதழ்களைப் பார்க்கவேண்டுமானால் தேடி அலைய வேண்டும். இப்போது இதழ் தொகுப்பு கலைஞன் பதிப்பகம் மூலம் வந்துவிட்டது. எளிதாகப் பார்க்கமுடிகிறது. இதன் மோசமான மற்றொரு விளைவு என்னவெனில் தாறுமாறான தரம்குறைந்த பிழைகள் நிறைந்த புத்தகங்களாக அவை வெளியிடப்படுவதுதான். கல்வித்துறை நிர்ப்பந்தங்கள் காரணமாக வேலைவாய்ப்புகள் கிடைக்குமென்பதால் ஏதாவது பழையதை அடித்துப்போடுங்கள் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அறிவுலகச் சோம்பேறிகள் எதையாவது சேர்த்து தொகுத்துப் போட்டுவிடலாம் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த அவசரநிலை நிதானமடையலாம். நமது கல்வி அமைப்பில் சீர்திருத்தம் ஏற்படும் வரை இது மாறாது. புத்தகம் கிடைக்காமல் இருக்கும் நிலையையும், பிழைகளுடன் புத்தகம் கிடைக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டாவதையே நல்லது என்று தேர்ந்தெடுப்பேன்.

.இலெ. தங்கப்பா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தேர்ந்தெடுத்த தமிழ் சங்கப்பாடல் தொகுப்பின் எடிட்டராக இருந்துள்ளீர்கள் . அந்த மொழிபெயர்ப்பைப் பற்றி மிகப்பெரிய முன்னுரை ஒன்றும் எழுதியுள்ளீர்கள்...இத்தொகுப்பின் முக்கியத்துவம் பற்றி கூறுங்கள்..?

தமிழின் இலக்கிய வளம் வெளியுலகத்திற்கு தெரியவர ஆங்கிலம் தான் முக்கியமான வழியாக உள்ளது. ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள் தமிழகத்து கலாசாரத்துக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள். .இலெ. தங்கப்பா தமிழகத்திலேயே வாழ்ந்து வருபவர். தமிழில் நல்ல புலமை உள்ளவர். அவரால் மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் சங்கப்பாடல் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை தமிழின் சாதனை என்றே சொல்வேன். லவ் ஸ்டான்ட்ஸ் அலோன் என்னும் இந்த தொகுப்பு பெங்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அடுத்து முத்தொள்ளாயிரமும் ஆங்கிலத்தில் வெளியாக உள்ளது. .லெ. தங்கப்பாவின் இந்த சாதனைக்கு அரசோ, செம்மொழி தமிழாய்வு நிறுவனமோ எதுவுமே எந்த உதவியையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமயமாதல் சூழலுக்குப் பிறகு வரலாற்று ஆய்வுகளுக்கு அரசு, நிறுவனங்கள் சார்ந்து பெரிய ஆதரவு இல்லாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது . இதே பின்னணியில் பொதுசமூகத்தினர் மத்தியில் ராமச்சந்திர குஹா போன்றவர்கள் நட்சத்திர அந்தஸ்து பெறுகிறார்கள் .. .இதுபற்றிய உங்கள் அனுமானம் என்ன ?

இந்தியாவில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி கற்பவர்களின் பெருக்கம் என்பது கற்பனை பண்ணியே பார்க்க முடியாதது. ஆனால் அடிப்படை அறிவியலில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. ஒரு காலத்தில் அறிவியல் துறையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் அடிப்படை அறிவியலில் வலுவாக இருந்ததால்தான் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் தற்போதிருக்கும் முட்டாள் துணைவேந்தர்கள் தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிப்படை அறிவியலால் என்ன பயன் என்ற எண்ணத்தில் உள்ளனர். அடிப்படை அறிவியல் இல்லாமல் எதுவும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போது நாம் விதைநெல்லை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அது தீர்ந்தபின்தான் எவ்வளவு பெரிய செல்வத்தை விட்டுவிட்டோம் என்று புரியத்தொடங்கும். தொழில்நுட்பத்துறையில் மட்டுமே நாம் வளர்ந்துகொண்டு இருக்கிறோம். இன்று ஏற்பட்டிருக்கும் கல்வி வளர்ச்சியில் வாசகர்கள் பலமடங்கு பெருகியுள்ளார்கள். புதிதாக படித்து வெளியே வரும் மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்கள் அறிவுத்தேட்டத்தில் நிறைவில்லாதவர்களாக உள்ளனர். உலகமயமாதலும் அதற்கு ஒருவகைக் காரணம். ஏனெனில் உலகமயமாதல் வேகமாக நடக்கும்போதுதான் பிராந்திய அடையாளத்திற்கு முக்கியத்துவம் வருகிறது. உதாரணத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரத்தில் ஆப்பம், இடியாப்பம் கிடைக்காது. இன்று இலைக் கொழுக்கட்டை கூட கடைகளில் கிடைக்கிறது. ஒரு பிராந்திய உணவு உலகமயமாதலால் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று சரவண பவனில் கருப்பட்டி மிட்டாய் கிடைக்கும் சூழல் உள்ளது. இதன் இன்னொரு விளைவு என்னவெனில் சாத்தூரில் அசல் கருப்பட்டி மிட்டாய் கிடைப்பதில்லை.
உலகமயமாதல் சூழலில் மக்களுக்கிடையே தீவிரமான அடையாளத்துக்கான தேட்டம் ஏற்படுகிறது. தொ. பரமசிவனின் அறியப்படாத தமிழகம் நூலுக்கு அதனால் தான் மாபெரும் வெற்றி பெறுகிறது. இழக்கும்போதுதான் ஒரு சமூகம் விழித்துக்கொள்கிறது. இழந்தவற்றைத் தெரிந்துகொள்ள படிக்க ஆரம்பிக்கிறான். தொ.பரமசிவன் இன்று ஒரு நட்சத்திரமாக மாறியிருப்பதன் காரணம் அதுதான்.
சமூக மோதல்கள், நெருக்கடிகள், வேறுவேறு அடையாள அரசியல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் சமூகங்களில் ஒரு பிரிவினர் இதற்கான பின்னணி வரலாற்றைத் தேடிப்போகிறார்கள். பாடநூல்களில் எந்த தகவல்களும் இல்லை. அப்படி தப்பித்தவறி இருக்கும் தகவல்களும் மங்கலாகவும் சுவராசியமற்றதாகவும் உள்ளது.
இச்சூழ்நிலையில்தான் கல்வித்துறையில் கூர்மையான எழுத்தாற்றல் உள்ள வர்கள் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. ராம்ச்சந்திர குஹா, திட்டமாகவே வெகுமக்களுக்கும் புரியும் வண்ணம் எழுதுகிறார். வெகுமக்களின் அபிப்ராயத்தில் மாற்றத்தை, விவாதத்தை ஏற்படுத்தும் வெகுமக்கள் அறிவுஜீவிகளாக அவரைப்போன்றவர்கள் செயல்படுகின்றனர். ராமச்சந்திர குஹா போன்றவர்களின் எழுத்தாற்றல், அன்றாட சமூகப் பிரச்னைகளுக்கு முகம் கொடுப்பது, புதிதாக விரிவடைந்து வரும் சூழலைப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளால் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
தமிழ் சூழலில் கல்வித்துறை எழுத்து என்பது சாரமில்லாமல் இருக்கணும்னு ஒரு கருத்து துரதிர்ஷ்டவசமாக உருவாகிடுச்சு. ஆனால் உலகின் சிறந்த சமூக அறிவியல் எழுத்துகள் அனைத்தும் அழகாக எழுதப்பட்டவைதான். கருத்துகள் தொடர்பாக இன்று மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் அந்த எழுத்துகள் இன்னமும் படிக்கும்படியாகவே உள்ளன. கார்ல் மார்க்சின் நூல்களை அவர் சொல்லும் விஷயத்துக்காக மட்டுமா படிக்கிறோம் .சொல்கிற முறையும் நம்மை கவர்கிறதே. கல்வித்துறையில் உள்ளவர்கள் மட்டுமே எனது எழுத்தை கடினமான எழுத்து என்று கூறியுள்ளனர்.

நவீன தமிழகப் பண்பாட்டுச் சூழலில் தமிழ்சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி பார்க்கிறீர்கள் ? எதிர்காலம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மதிப்பீடுகள் இல்லை... முற்றிலும் சீரழிந்து வருகிறது என்ற எதிர்மறையான கருத்துகள் எழுகின்றதே. ?

கடந்த காலம் பொற்காலமாக ஒன்றும் இல்லை. அதனால் எல்லாம் சீரழிந்து போய்விட்டது என்ற கருத்தை முற்றிலும் மாற்றத்திற்கு எதிரான கருத்தாகவே பார்க்கிறேன். நமது சமூகம் போல இத்தனை பெரிய மாற்றத்தை இவ்வளவு வேகமாக வேறெந்த சமூகமும் சந்திக்கவில்லை என்றே சொல்வேன். அந்த மாற்றங்கள், மாற்றங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை புரிந்துகொள்வதற்கான ஆற்றல்மிக்க அறிவுத்துறைகளையும் அறிவுஜீவிகளையும் இந்த சமூகத்தில் போதுமான அளவுக்கு உருவாக்கவில்லை. இதுபோன்ற பண்பாடு கலாசார மாற்றத்துக்கு முகம்கொடுப்பவர்களாக கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள்தான் இருக்கமுடியும். எழுத்தாளர்கள் தங்களது வாய்ப்புக்குட்பட்டு ஒரு நிலையில் முகம்கொடுக்கின்றனர். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் 20 சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறத்துக்கு வந்துவிட்டார்கள். ஒரு கோடி பேரின் வருமானம் அவர்களது முந்தைய தலைமுறை யோசித்தே பார்த்திட முடியாத வகையில் உயர்ந்துவிட்டது. இதன்மூலம் சமூகத்தில் என்னென்ன தாக்கங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்வதற்கு சமூகவியல் படித்தவர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் சமூகவியல் துறை கிடையாது. ஏதோ இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பெயரளவுக்கு இருக்கிறது. அங்கிருக்கும் ஆசிரயர்களுக்கு தமிழ்வாழ்வுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இதை ஒரு மானுடவியலாளன் ஆய்வுசெய்ய முடியும். ஆனால் சென்னை பல்கலைக்கழகத்தை தவிர வேறெங்கும் அந்த துறை இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசியல் மாற்றங்கள் வேகமாக நடைபெறும் காலம் இது. தேர்தல் அரசியல் சார்ந்த புள்ளவிபரங்கள் கூட நம்மிடம் சரியாக இல்லை. தமிழக அரசியல் கட்சிகள் பற்றி கல்வித்துறை ஆய்வு செய்தவர் யார் இருக்கிறார்கள்? பத்திரிக்கையாளர்களிடம் தான் கேட்கவேண்டியுள்ளது. ஒரு பல்கலைக்கழக பேராசிரியரிடம் போய் கேட்கமுடியாது. வரலாற்றுத்துறை பற்றி பேசவே வேண்டியதில்லை.
தமிழகத்தில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் வேளையில் அதை ஆய்வு செய்யவேண்டிய கல்வித்துறை முற்றிலும் பாராமுகமாக உள்ளது கவலைக்குரியது. தமிழகத்தில் கல்வித்துறை முழுவதும் ஊழல்மயமாகி விட்டது. தனியார் கல்லூரியில் பணிபுரியும் ஒருவர் பொதுப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வந்து பணிபுரிந்துவிட்டு திரும்பவும் தனியார் கல்லூரிக்கே செல்லும் நிலை உள்ளது. இவர்கள் யார் நலனில் அக்கறை வைப்பார்கள்? தனியார் பல்கலைக்கழகங்கள் எதிலும் வாழ்வியல் துறைகள், சமூக அறிவியல் துறைகள் கிடையாது. அரசுப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் துறைகளில் சரியான நபர்கள் இல்லை. அவர்கள் ஓடுபாதைக்கு வெளியே அமர்ந்திருப்பவர்களாக உள்ளனர்.


தற்போது என்ன பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள் ?

நான் தொடர்ந்து ஒரே ஆய்வையே செய்துவருகிறேன். தமிழர்கள் நவீன சமூகமாக மாறும் காலகட்டம் தான் என்னுடைய பிராந்தியம். 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து சுதந்திரப் போராட்ட காலம் வரையில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்தான் எனது ஆய்வுநோக்கமாக உள்ளது. இப்போது 1960 கள் வரை வந்துள்ளேன். இதில் எனக்கு சில முதன்மைப்படுத்தல்கள் உள்ளன. ஒன்று திராவிட இயக்கத்தினுடைய தாக்கத்தினால் மாறும் சமூக அடித்தளம். இரண்டு மூன்று முக்கிய ஆளுமைகள் வழியாக சமூக பண்பாட்டு வெளிகளில் ஏற்பட்ட மாற்றத்தையும் ஆய்வு செய்துவருகிறேன். பாரதி, ..சி, புதுமைப்பித்தன் தான் அவர்கள். நான் இலக்கிய ஈடுபாடு மூலமாகத்தான் ஆய்வுத்துறைக்கு வருகிறேன்.

பெரியார் குறித்து மிகப்பெரிய விமர்சனங்கள் வந்தபோதும் திராவிடவரலாற்று ஆய்வாளராக உங்களிடமிருந்து எந்த கருத்தும் வரவில்லையே ? என்ன காரணம் ?

நான் இந்த அறிவுலகத்தில் காலடி எடுத்துவைத்தபோது கௌரவமான அறிவுத்துறை வட்டாரத்தில் பெரியார் குறித்து பேசவே மாட்டார்கள். கல்வித்துறை வளாகங்களில் அவர் மிகுந்த புறக்கணிப்புக்கும் வசவுக்கும் ஆட்பட்டவராகவே இருந்தார். ஆனால் அதிலும் இன்னொரு அம்சம் என்னவெனில், பெரியார் எழுத்துகளை வாசித்தவர்கள், அபிமானம் உள்ளவர்கள், அவர்மூலம் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்தவர்களின் அறிவுச்செயல்பாட்டில் கூட பெரியாரின் தாக்கத்தைப் பார்க்கமுடியாமல் இருந்த சூழ்நிலை இருந்தது. இந்தச் சூழ்நிலை மண்டல், மசூதி பிரச்னை தீவிரமடைந்தபோதுதான் மாறியது. ஒரு காலத்தில் புறக்கணிப்புக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியிருந்த பெரியார் கொண்டாடப்படும் அந்தஸ்தை அடைந்தார். இது ஒருவகையில் நல்லது. பெரியாரின் எழுத்துகள் துண்டுதுண்டு வெளியீடுகளாக திராவிடர் கழகம் போட்டது தவிர வேறெதுவுமே முன்பு கிடைக்காத நிலை இருந்தது. 1974 இல் ஆனைமுத்து போட்ட தொகுப்பு தான் ஆவணமாக இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் பெரியார் எழுத்துகள் அபரிமிதமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் தங்கள் நிலையை தந்திரோபாயமான முறையில் பெரியார் தொடர்பாக மாற்றிக்கொண்டுள்ளனர். இன்றைக்கும் பெரியாரை அவர்கள் முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ளவில்லை. பி. ராமமூர்த்தியின் பார்வையையே வெளிப்படையாக வைத்து இனியும் அரசியல் செய்யமுடியாது என்பதால் அந்த மாற்றம் வந்திருக்குது. பெரியார் குறித்து முழுமையாக மதிப்பிட்டு உள்வாங்கும் சூழ்நிலை ஏற்பட இன்னும் பத்து ஆண்டுகள் பிடிக்கும். இன்னும் மதிப்பிடவேண்டிய நிலைதான் உள்ளது. பெரியாரின் கடைசி 25 ஆண்டுகால எழுத்துகள் இன்னமும் கிடைக்கவில்லை. ஆனைமுத்து நூலில் பிற்பகுதி பலவீனமாக இருப்பதற்கு காரணம் அதுதான். ஆனால் இந்த காலகட்டத்தில்தான் அவர் நாளேடு நடத்துகிறார். அதற்கு முன்புவரை வாரப்பத்திரிக்கைகள் அவரது பிரதான வெளிப்பாட்டுக்களன்களாக இருந்துவந்தது. பெரியார் எழுத்துகளைப் பார்த்தீர்கள் எனில் இலக்கணம் கிடையாது. எழுவாய், பயனிலை பற்றி கவலையே படமாட்டார். ஆனால் வாசிக்கும்போது எவ்வளவு சுவாரசியமாக உள்ளது. அத்தனை படைப்புத்தன்மை கொண்ட எழுத்து அவருடையது. ஆனால் அவரது அமைப்பு வழிவந்த தொண்டர்களுக்கு ஒரு வாக்கியம் கூட அழகுபட எழுதமுடியாத நிலைதான் உள்ளது. பெரிய படைப்பூக்கம் கொண்ட எழுத்துக்கு எழுதப்படும் முன்னுரையில் வெறும் சக்கை எழுத்துகளாக உள்ளன.
அமைப்புக்கு வெளியே எத்தனையோ இளைஞர்கள் பெரியாரின் எழுத்துகளை தற்போது படிக்கும் வாய்ப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது. அதுதான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

தலித் அறிவுஜீவிகள் பெரியார் மேல் வைத்த, விமர்சனத்தை திராவிட இயக்கத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன். பெரியார் உருவாக்கிய ஜனநாயக மரபின் வெற்றியாகும் அது. சமூகத்தின் அடித்தளம் வரை பெரியார் ஊடுருவியதற்கான சான்று அது. ரவிக்குமார் போன்றவர்களின் விமர்சனம் என்பது சூழ்நிலைக்கேற்ப வெளிப்படுத்திய விமர்சனம். தம்மை முன்னிலைப்படுத்துவதற்கான தந்திரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

அந்த காலத்தில் காப்பி இல்லை போன்ற கட்டுரைகளை எப்படி எழுதுகிறீர்கள் ?

பொதுவாக வரலாற்றுத்துறையில் அதிகாரப்பூர்வமான ஆவணங்களைத்தான் ஆராய்ச்சிக்குரியனவாக நம்புவார்கள். அரசு ஆவணக்காப்பகத்தில் இருந்தால்தான் சரியான ஆவணம் என்று நினைப்பார்கள். அல்லது பெரிய தலைவர்களின் எழுத்துகளை நம்புவார்கள். ஆனால் தற்போது அந்த பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு தவிர்த்த சமூகத்தின் செயல்பாட்டினை பகுத்தாய்வதை ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இன்று அந்நிலை இல்லை. சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் அனுபவத்தை, வாழ்க்கை மாற்றத்தைப் பகுத்தாய்வதுதான் வரலாற்று ஆய்வாக இன்று மாறியுள்ளது. மக்களுடைய வாழ்வனுபவங்கள் வெளிப்படிருக்கும் புதிதான ஆவணங்களை தேடுவது இப்போது வழக்கமாகியுள்ளது. துண்டு பிரசுரங்கள், பத்திரிக்கை நகைச்சுவைத் துணுக்குகள், கட்டுரைகள் ஆகியவற்றை தேடுகிறோம். எளிய மக்களோட வாழ்க்கை எதிர்மறையான முறையில்தான் பதிவாகும். மேல்தட்டில் இருக்கிற அரசு சமூகங்களின் ஆவணங்களில் அவை எதிர்மறையாக இருக்கும். இந்தக் காலத்துல பள்ளுப் பறையனெல்லாம் காபி குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க என்ற குறிப்பு எதிலாவது வந்திருக்கும். அப்போதுதான் நீராகாரம் குடித்த மக்கள் காபியைக் குடிக்கிறார்கள் என்ற செய்தியைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதற்காக புதிய சான்றாதாரங்களைத் தேடவேண்டியுள்ளது. வரலாறு என்பது சமகாலத்துடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும். அதைச்செய்வதற்கான ஆவணங்களைத் தேடுகிறோம். அவை நம்பகமாக இருக்கவேண்டும். அதனால்தான் பதிப்புப்பணியில் ஈடுபடுகிறோம். ஐரோப்பாவின் பாரம்பரியப் பல்கலைக்கழகங்களில் வரலாறு படிப்பவர்களுக்கு பழைய ஆவணங்களை எப்படி படிக்கவேண்டும் பிரதிசெய்யவேண்டும் என்று பாடம் உள்ளது. ஆனால் இங்கேதான் வரலாற்றுத்துறையில் ஆய்வுசெய்துவிட்டு ஏன் பதிப்புத்துறைக்கு வருகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுப்பாக உள்ளது.

Comments