Skip to main content

விடியல் சிவா



தமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள் இன்று ஒரு வலுவான அரசியல் தரப்பாக மாறியிருக்கிறது.   புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. லத்தீன் அமெரிக்க படைப்பாளர்களாக காப்ரீயல் கார்ஸியா மார்க்வெஸ்ஸும் போர்ஹேயும்  இங்கே பிரதானப்படுத்தப்பட்ட பின்னணியில், ஆழ்ந்த  அரசியல் த்வனியுடன் அந்நிலப்பரப்பை exotic ஆக்காமல்,  உஷ்ணமான மொழியில் எழுதிய  யுவான் ரூல்போ என்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் சிறுகதைகள் மற்றும் ஒரே நாவலை விடியல்தான் வெளியிட்டது. எரியும் பனிக்காடு மற்றும் சயாம் மரண ரயில் போன்ற நூல்களை வாசிப்பவர்கள், புத்தக வாசிப்பும், வாழ்க்கையும் அத்தனை சௌகரியமானதல்ல என்ற உணர்வை அடைந்துவிடுவார்கள். அவர் வெளியிட்ட சிறு வெளியீடுகளில் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தது சல்வடார் ஆலன்டே பற்றிய நூல் ஆகும். நிறப்பிரிகை போன்ற சிறுவட்டத்தில் தொடங்கி இன்று தலித் அரசியல் மையநீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதற்கு விடியல் பதிப்பகத்தின் பங்கும் கணிசமானது. அர்ப்பணிப்பு மற்றும் செயலை மட்டுமே சொல்லாக நினைப்பது, நம்பிக்கைகளில் பிடிவாதம் போன்ற குணங்கள் இன்று 'பழைய தலைமுறை மனிதர்களின்'  பண்புகளாகிவிட்டன.  செயல் என்பதே சிறந்த சொல் என்று எழுதியவர்கள் இன்று அதிகாரத்தின் அலங்கார பெருங்கதையின் பகுதியாக மாறிவிட்ட காலம் இது. மதுரையிலும் சென்னையிலும் நடக்கும் புத்தக  விழாக்களில் மிக அமைதியாகவே விடியல் சிவாவைப்  பார்த்திருக்கிறேன். பெரிதாக உரையாடல் எல்லாம் இருக்காது. ஒரு நிமிடம் அவருடன் நின்றுகொண்டிருந்துவிட்டு நகர்வது வழக்கமாக இருந்திருக்கிறது. யுவான் ரூல்போ எழுதிய எரியும் சமவெளி புத்தகத்தையும் பெட்ரோ ப்ரோமோவையும் திரும்பத் திரும்ப தொலைத்து அவரிடம் வாங்கியிருக்கிறேன். அவர் வெளியிட்ட ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம், ஈரான் ஒரு குழந்தைப் பருவம்  புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். தபாலிலும் அனுப்பியுள்ளார். இதுதவிர அவருடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. ஆனால் இருபது நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விபட்டபோது சங்கடமாக இருந்தது. இப்போது அவர் மரண செய்தி படித்தபோது மிகவும் துக்கமாக இருக்கிறது. தமிழ் சூழலில் தன்னை முன்னிலைப்படுத்தாமல், சுயலாபங்களைக்  கணக்கிடாமல் சமூகமாற்றம் என்ற கனவின் உந்துதலை மட்டுமே கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்ட அரிதான ஆளுமைகளில் ஒருவர் விடியல் சிவா.

Comments

chandramohan said…
மிக சுருக்கமாக நல்ல அவதானிப்புடன் எழுதி இருக்கிறீர்கள் ஷங்கர். இவரைபோன்றவர்கள் வரும் தலைமுறையில்வர வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. தன்னை முன்னிறுத்தாமல் செயலை மட்டும் முன்வைக்கும் ஆளுமைகள் அரிதாகி வரும் நிலையில் இவர் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகத் தோன்றுகிறது.