Skip to main content

புதியவள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

மெலிந்த இடை உடல் புதுமனைவி
தன்னுடலைத் தான்
தாங்க இயலாதது போல்
தாங்கி
ஒயிலாய்
சிணுங்கிப் பிணங்கி
அந்த உணவகத்துக்குள் நுழைகிறாள்
இருந்தவர் எழுந்தவர் பரிசாரகர் காசாளர்
எல்லாரும் ஒருமுறை படபடத்து அமைதியாகினர்

எந்த இடமும் அவளுக்கு ஒப்பவில்லை
எந்த மேஜைகளும் அவளுக்குப் பொருத்தமாயில்லை
பட்டியலில் எந்த உணவும் அவளைக் கவரவேயில்லை
எரிந்து கனன்று அடிக்கடி முகம்சிவக்கிறாள்
புதுமனைவி.
இரவில் மயிலிறகாய் இருந்த சிறுகோபம்
பாறைகளாய் பகலில் மாறும் காரணம்
அவனுக்குத் தெரியவேயில்லை
இருப்பினும்
அதை
சுமையில்லாமல் பாவித்து
அந்தரங்கம் வருடும்
செல்ல வார்த்தைகளால் ஊடலை
அவிழ்க்கப் பார்க்கிறான்



அவள் கழுத்தில்
உடைக்கு நடுவே
கோடாய்ப் போகும்
புதிய மஞ்சள் சரடு
எல்லா காற்றும்
எல்லா கற்பனைகளும் கோதித் தடவும்
நிர்வாண உடல்களாக
அந்தப் புதிய ஜோடியை
உணவகத்தில் ஆக்குகிறது



எவர் கருத்துக்கும் இடமற்ற தன்உலகில்
இளஞ்சினத்தை ஊஞ்சலாக்கி ஆடுகிறாள்
புதுமனைவி.
அவனோ பழங்கவிதைகள் படித்ததில்லை
ஆனாலும் இன்றிரவோ
நேற்றிரவோ தன் தலையணையிடம் புலம்பிவிட்டான்
காமம் ஒரு கடும்நோய்தான் என்று...

(தீராநதி, மே மாதம்)

Comments