Skip to main content

Posts

தனிமைவாசம் – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

துயருறு இதயமே?  யாராவது வந்தார்களா மீண்டும் இல்லை, யாரும் வரவில்லை ஒரு வழிப்போக்கர் எங்கிருந்தோ வந்திருக்கலாம் அவரும் போய்விடுவார் இரவு கடந்துவிட்டது நட்சத்திரத் தூசிகள் விலகத் தொடங்குகின்றன கனவுபடர்ந்த மாளிகை விளக்குகளின் தீபங்கள் மெலிந்து மங்கத் தொடங்குகின்றன காத்திருப்பில் சோர்ந்த சாலைகள் அனைத்தும் தற்போது ஆழ்ந்த உறக்கத்தில். அனுதாபமே இல்லாத புழுதிபடர்ந்த தெரு எண்ணற்ற காலடித்தடங்களால் போர்த்தப்பட்டுள்ளது   விளக்குகளை ஊதியணைத்துவிடு கோப்பையிலிருந்தும் ஜாடிகளிலிருந்தும் திராட்சை ரசத்தைக் கொட்டி அகற்றிவிடு அந்தி வந்துவிட்டது உறங்காத உன் கண்களை இமைகளால் மூடு இப்போது இங்கே யாரும் வரப்போவதில்லை.

இலையுதிர்காலம் வந்தது – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

இப்படித்தான் மரங்களிடம் இலையுதிர்காலம் வருகிறது: அவற்றின் எலும்புடல்கள் வெறிக்கத் தோலுரித்துவிடுகிறது. இதயங்களை உலுக்கிய உலுக்கில் மரங்கள் பழுப்பிலைகளைத் தரையெங்கும் சிதறடித்துவிடுகின்றன. எதிர்ப்பின் சிறுமுனகலும் இல்லாமல் யாரும் அவற்றை உதைத்து உருக்குலைத்துவிட முடியும். கனவுகளை முன்னறிவித்த பறவைகளின் தொண்டையிலிருந்தெழும் ஒவ்வொரு குரலும் கிழிக்கப்பட்டு தங்கள் பாடலிலிருந்து நாடுகடத்தப்பட்டு வேடன் நாணை ஏற்றுவதற்கு முன்பே புழுதிக்குள் வீசப்பட்டுள்ளன மே மாதத்தின் கடவுளே, இரக்கம் காட்டு. உனது புத்துயிர்ப்பு வேட்கையினால் இந்த மரங்களின் இறந்த நாளங்களுக்குள் மீண்டும் ரத்தம் பாயச்செய்து அதன் உலர்ந்துதிர்ந்த உடம்புகளை ஆசிர்வதி. உனது பசுமையின் பரிசை இந்த மரங்களில் கொஞ்சத்துக்காவது கொடு ஒரு பறவை பாடட்டும்.

கடந்த இரவு - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  கடந்த இரவில் மங்கித் தேய்ந்த உனது நினைவு வந்தது காட்டில் வசந்தம் அமைதியாக நுழைவதைப் போல் பாலையில் ஊர்ந்துசெல்லும் பனிக்காற்றைப் போல் நோயுற்றிப்பவனிடம் காரணமேயின்றி அமைதி வந்தமர்வதைப் போல். ( ஆங்கிலத்தில் : விக்ரம் சேத்)

சபரிநாதனின் 'துஆ’

  இறால் , தனது உடலை இழந்து , வெறும் கூடாக எஞ்சும்போதும் புறநிலையில் எப்படி இறாலாகவே தோற்றம் அளிக்கிறது ? அக்கூடு வெறும் அரண் மட்டும் அல்ல. உள்பகுதியை இழந்தபிறகு , இறாலின் தோடு ஒரு   நுட்பமான ஆபரணமாகிவிடுகிறது. இறாலின் தன்னிலையும் அதில் வெளிப்படுகிறது. ஆபரணத் தன்னிலை ; ஆனால் சாரம் இறங்கியது.   இறாலற்ற ஓர் இறால். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் “பெரிய இரட்டை இதய நதி” ( Big Two-Hearted River) சிறுகதையில் நாயகன் நிக் , ட்ரவுட் ( TROUT) மீனைப் பிடித்து , அதன் உட்புறம் , நாக்கு , செவுள் எல்லாவற்றையும் அனாயசமாக அகற்றி , கழுவியபிறகும் அவனுக்கு அது உயிருள்ள ட்ரவுட் மீனைப்போலவே தெரிகிறது. இறாலில் தோடோ அல்லது ஹெமிங்க்வேயின் டிரவுட் மீனோ , இரண்டுமே   உள்ளடக்கமே இல்லாத நுட்பமான செறிவான தன்னிலைகள். தன் சமீபத்திய கவிதை நூலான “துஆ”வில் , இல்லாமல் இருக்கிற அந்த தன்னிலையினையே , சபரிநாதன் அடைந்துள்ளார். இத்தொகுப்பில் தன்னிலையைத் துறந்த பாவனையில் நாடகங்களை நிகழ்த்தி , தன்னிலையை பல நிலைகளில் வெளிப்படுத்தும் பிரயத்தனத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னிலையை வேறுவேறு காலங்களிலும் பருவங்களிலும் நிலங்களிலும் குரல்களி